ரஷ்யா பறக்கும் அரசு பள்ளி மாணவர்கள்! முயற்சி எடுத்த தமிழ்நாடு அரசு.. சாதித்து காட்டிய ஆசிரியர்கள்!
சென்னை: தமிழ்நாடு அரசின் ஊக்குவிப்பில் தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பில் முதற்கட்டமாக 50 மாணவ-மாணவிகள் சென்னை விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா புறப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில் முடங்கி கிடந்த அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்த தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை அரசு கல்வி நிறுவனங்களும் மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் 'ராக்கெட் அறிவியல்' என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி திட்டம் தனியார் நிறுவனம் சார்பில் கடந்தாண்டு ஜனவரி 26ம்தேதி தொடங்கப்பட்டது.

பிரமோஸ் ஏவுகணை திட்ட இயக்குநர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் தமிழகத்தில் உள்ள 56 அரசு பள்ளிகளை சேர்ந்த 500 மாணவர்கள் பங்கேற்றனர். 500 நாட்களை கடந்து நடந்த இந்த பயிற்சி நான்கு கட்டங்களாக நடந்து முடிந்தது. முதல் கட்டத்தில் 500 மாணவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், இரண்டாம் கட்டத்தில் 220 மாணவர்களும், மூன்றாம் கட்டத்தில் 130 மாணவர்களும் தேர்வாகினர். இறுதியாக 75 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் முதல்கட்டமாக 50 மாணவர்கள், தமிழக அரசின் ஆதரவுடன் ரஷ்யாவில் யூரி ககாரின் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட இன்று புறப்படுகின்றனர். இந்த ரஷ்ய பயணத்திற்கு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருந்து 8 மாணவிகள், மதுக்கூர் அரசு பள்ளியிலிருந்து ஒரு மாணவர், திருச்சியை சேர்ந்த 2 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வெற்றிக்கு பின்னாள் ஆசிரியர்களின் கடுமையான உழைப்பு இருப்பதாக மாணவர்கள் கூறியுள்ளனர்.
சமீபத்தில் இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டம் வெற்றியடைந்ததை தொடர்ந்து சாமானிய மக்களுக்கும் விண்வெளி அறிவியல் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் பள்ளி மாணவர்களை ரஷ்ய விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்வது என்பது மாணவர்களுக்கும், விண்வெளி அறிவியல் மீது அதீத ஈடுபாடு ஏற்படுத்தும் என்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர். மட்டுமல்லாது விண்வெளி துறையில் ரஷ்யாதான் உலக நாடுகளுக்கு முன்னோடி. அந்நாடு போட்ட பாதையில்தான் நாம் அனைவரும் தற்போது நடந்துகொண்டிருக்கிறோம்.
அவ்வளவு ஏன்? இந்தியாவிலிருந்து முதன் முதலில் விண்வெளிக்கு பறந்த ராகேஷ் சர்மா, ரஷ்யாவின் உதவியால்தான் விண்வெளிக்கு சென்றார். ரஷ்யா தனது சொந்த செலவில் இவரை விண்வெளிக்கு அனுப்பியது. இதன் மூலம் விண்வெளிக்கு பறந்த 128வது மனிதர் என்கிற பெருமையையும் இவர் பெற்றார். எனவே விண்வெளி துறையில் இந்தியாவுக்கு மிகுந்த நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications