தமிழ் தேர்வுனு சொல்லாம ஏன் லாங்குவேஜுனு சொல்றீங்க.. தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் நறுக் கேள்வி
சென்னை: தமிழக அரசு வெளியிட்டுள்ள அரையாண்டு பொதுத் தேர்வு அட்டவணையில் தமிழ் என்பதற்கு பதிலாக Language என குறிப்பிட்டுள்ளது கல்வித் துறையின் பொறுப்பற்ற செயல் என கல்வியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்று நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் புதிய கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கவிஞரும் ஆசிரியருமான சுகிர்தா ராணி தனது பேஸ்புக் பக்கத்தில் நேற்று கூறியிருந்ததாவது: சென்னை புயல் வெள்ளம் காரணமாக நாளை (இன்று) தொடங்கவிருந்த அரையாண்டுப் பொதுத் தேர்வுகள் வரும் 13 ஆம் தேதி தொடங்குவதாக தமிழக அரசு புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது.
இரண்டு விஷயங்கள். ஒன்று, தமிழ்ப்பாடத் தேர்வைத் தமிழ் என்று குறிப்பிடாமல் Language என்று குறிப்பிடப்படுள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ்தான் முதல்மொழி. எனவே தமிழ் என்றே குறிப்பிட வேண்டும்.
இரண்டாவது, பத்தாம் வகுப்புக்குத் தேர்வு எழுதும் நேரம் மூன்று மணி நேரம். மொத்த மதிப்பெண் நூறு. அட்டவணையில் பத்தாம் வகுப்பு தேர்வு நேரம் பிற்பகல் 2 .00 முதல் 4.30 வரை என உள்ளது. இது அதிகாரிகளின் கவனக் குறைவா? அல்லது தேர்வு நேரத்தை உண்மையாகவே அரைமணி நேரம் குறைத்து விட்டார்களா? கல்வித் துறை கவனமாக இல்லாமல் இப்படி பொறுப்பற்று இருக்கலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இவர் குறிப்பிட்டுள்ள அந்த பதிவில் வந்த கமென்டுகளில் ஒரு சிலர் language என்பதுதான் சரி. சென்னை போன்ற பெருநகரங்களில் தமிழ், தெலுங்கு, ஜெர்மன், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்வு எழுதுவார்கள் என தெரிவித்துள்ளார். அதற்கு சுகிர்தா ராணியோ ஆப்ஷனல் லாங்குவேஜ் என்றால் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அரசு தேர்வு இயக்ககம் எப்போதும் மொழி பாடத்தை லாங்குவேஜ் என்றுதான் குறிப்பிடுவார்கள் என தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ பாடப்பிரிவு படிக்கும் மாணவர்களுக்குத்தான் விருப்ப மொழி பாடங்கள் மாறுபடும் என்பதால் அவர்கள் லேங்குவேஜ் என பயன்படுத்துவார்கள். தமிழக பாடப்பிரிவில் எதற்காக அப்படி ஒரு பதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆதங்கமாக இருக்கிறது.
அது போல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுதும் நேரம் 3 மணி நேரமாக உள்ள நிலையில் தற்போது இரண்டரை மணி நேரம் என குறிப்பிட்டுள்ளதற்கும் கண்டனங்கள் எழுகின்றன. இதற்காக பழைய அரையாண்டு தேர்வு வினாத்தாளும் ஆதாரமாக வைக்கப்பட்டுள்ளது. அதில் நேரம் 3 மணி நேரம் என்றுதான் உள்ளது. இது நிச்சயம் அதிகாரிகளின் அலட்சியமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications