ரூ.100,000 தரப்போகும் தமிழக அரசு.. பெண்கள், திருநங்கைகளுக்கு ஜாக்பாட்.. அடுத்த வாரமே குட்நியூஸ்
சென்னை: தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள பெண்கள் மற்றும் திருநங்கை ஆட்டோ டிரைவர்கள் ஆயிரம் பேருக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக அடுத்த வாரம் தமிழக அரசின் அரசாணை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1,000 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதியதாக ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தொழிலாளர் நலத்துறை சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அதன்படி கடந்த 2023-24-ம் நிதி ஆண்டில் 500 பெண்கள் மற்றும் திருநங்கைகள் ஆட்டோ வாங்குவதற்கு தலா ரூ.1 லட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டிருந்தது. சென்ற ஆண்டு 500 பேருக்கு மானியம் வழங்கிய அரசு, இந்த ஆண்டு 1,000 பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்குவதற்கு தலா ரூ.1 லட்சம் வழங்க உள்ளது. இது தொடர்பாக சட்டசபையில் கடந்த ஜூன் மாதம் நடந்த தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் கூறியிருந்தார்.
இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும். இதற்கான அரசாணை அடுத்த வாரம் வெளியாக உள்ளதாகவும் தொழிலாளர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். இது தொடர்பாக அந்த அதிகாரி கூறும் போது, ஒரு ஆட்டோவின் விலை ரூ.3 லட்சத்துக்கு மேல் இருக்கிறது. இதில் ஒரு லட்சம் ரூபாய் மானியத்தொகையாக வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகைக்கு சொந்த சேமிப்பு பணம் அல்லது கடன் வாங்கி செலுத்தலாம்.
சொந்தமாக ஆட்டோ வாங்க விரும்பும் பெண், திருநங்கை ஆட்டோ டிரைவர்கள் வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெற முடியும். இந்த மானியத்தொகையை பெறுவதற்கு 338 பேர் ஏற்கனவே முன்பதிவு செய்து காத்திருந்தார்கள். இந்த திட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் சென்னை, மதுரையை சேர்ந்தவர்கள் மட்டுமே பயன் அடைந்தனர். இந்த நிதி ஆண்டில் தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள், திருநங்கைகள் (வாரியத்தில் பதிவு செய்தவர்கள் மட்டும்) விண்ணப்பித்து பயன் பெற முடியும்.
இன்றைய சூழலில் ஆட்டோ டிரைவர்கள் பலர், வாடகைக்கு ஆட்டோவை வாங்கி ஓட்டுகிறார்கள். அதற்கு வாடகைத் தொகையாக இடத்துக்கு ஏற்றார் போல் நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.700 வரை உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த நிலையில் சொந்தமாக ஆட்டோ வாங்கும் போது இந்த சுமை குறைந்துவிடும். அதே வேளையில் இந்த பணத்தை சேமித்து ஆட்டோவுக்கான கடன் தவணையை செலுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications