தமிழக அரசு நிறைவேற்றிய 4 முக்கிய மசோதாக்கள்.. உடனே ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ரவி! என்ன மேட்டர்
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட4 சட்டத் திருத்த மசோதாக்கள்- புதிய மாநகராட்சிகள் உருவாக்க வருவாய் மற்றும் மக்கள் தொகை வரம்புகளைக் குறைப்பது, சென்னையில் கழிவுநீர் இணைப்பைக் குறைப்பது, சென்னை காவல் சட்டத்தை மற்ற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வது ஆகிய 4 சட்டத்திருத்த மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இந்த சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. அதில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்ட நிலையில், பல மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.

மசோதாக்கள்: புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளையும் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த ஏதுவாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த மக்கள் தொகை, வருமான அளவுகளைக் குறைக்கும் நகர்ப்புற உள்ளாட்சி திருத்தச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மூலம் நகர்ப்புற உள்ளாட்சி சட்டப்பிரிவில் மக்கள் தொகை 3 லட்சம் என்பது 2 லட்சமாகவும், சம்பந்தப்பட்ட பகுதியின் ஆண்டு வருமானம் ரூ.30 கோடியில் இருந்து ரூ.20 கோடியாகவும் குறைக்கப்பட்டு திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், ஊரக உள்ளாட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது அப்பகுதியில் வரும் சொத்துக்கள் உள்ளிட்ட விஷயங்களை மாற்றம் செய்யவும் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
கழிவுநீர் சட்டம்: மேலும், சென்னை தொடர்பாகவும் ஒரு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதாவது ஒரு தனியார் வளாகம் அல்லது கடைக்கு 30 மீட்டர் தொலைவில் கழிவு நீர்ப்பதை இருந்தால், அந்த கடை அல்லது வளாகத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பவர் கழிவுநீரை கழிவுநீர்ப்பாதையில் வெளியேற்றுவதற்காக இணைப்பு பெறுவதைக் கட்டாயமாக்கும் வகையில் சென்னை குடிநீர் வாரிய விதிகளில் திருத்தம் செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், சென்னையில் அமலில் இருக்கும் மாநகர காவல் சட்டத்தை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்வதற்கான சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேற்றப்பட்டன.
ஆளுநர் ஒப்புதல்: இது போல மொத்தம் 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டன. இந்நிலையில், இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த சட்டத்திருத்தங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளன.












Click it and Unblock the Notifications