தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்!
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். நிதித்துறை சார்ந்த 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி வரை நடந்தது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு, துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் விவாதம் நடந்தது. மேலும் பல்வேறு மசோதாக்களும் இந்த கூட்டத்தொடரின் போது நிறைவேற்றப்பட்டது.

4 மசோதாக்களுக்கு ஒப்புதல்
குறிப்பாக 18 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் அடுத்தப்படியாக ஆளுநர் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் 18 மசோதாக்கள் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக அரசு அனுப்பிய 18 மசோதாக்களில், நிதித்துறை சார்ந்த 4 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். நிதித்துறை சட்ட முன் வடிவு, நிதி ஒதுக்க சட்ட முன்வடிவ மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். மீதி உள்ள 14 மசோதக்கள் அவரது ஒப்புதலுக்காக பரிசீலனையில் உள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என் ரவி நீண்டகாலம் கிடப்பில் போட்டு இருந்தார். இதனால் ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிம்ன்ற நீதிபதிகள் ஜே. பி பர்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த மாதம் 8 ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
அதன்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்துக்குள்ளும், ஆளுநர் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதங்களுக்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும் என்று காலக்கெடு நிர்ணயித்தது. ஆளுநர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்களுக்கு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. ஆளுநர் அனுப்பி வைத்த மசோதா மீது ஜனாதிபதி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டால், மாநில அரசுகள் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் தெரிவித்தது இருந்தது.












Click it and Unblock the Notifications