ஆளுநர் ரவி கோவைக்கு கிளம்பிய விமானம் ‘லேட்’.. பைலட்டுக்கு திடீர் நெஞ்சுவலி.. பரபரத்த ஏர்போர்ட்!
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் விமானம் கிளம்ப தாமதமானது. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு, ஆளுநர் சென்ற விமானம் கோவைக்கு ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கோவையில் பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கவுள்ளார். இதையொட்டி இன்று காலை 8.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளம்பும் இண்டிகோ விமானத்தில் கோவைக்குச் செல்ல இருந்தார்.

சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் ரவி, தான் கிளம்பவேண்டிய இண்டிகோ விமானத்தில் ஏறியதற்குப் பிறகு, அந்த விமானத்தை இயக்கவேண்டிய விமானிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. உடனடியாக மாற்று விமானி வரவழைக்கப்பட்டார்.
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒன்றரை மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருந்து பின்னர் மாற்று விமானி வந்தவுடன், அதே விமானத்தில் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றார். சென்னையில் இருந்து கோவைக்கு காலை 8.25 மணிக்கு செல்ல வேண்டிய ஆளுநர் பயணித்த விமானம் 10.07 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றது,
இதற்கிடையே, ஆளுநர் ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் முற்போக்கு அமைப்புகள் சார்பில் கருப்புக் கொட்டி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மருதமலை சாலையில் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications