திமுக செக்.. இறங்கி வருகிறார் ஆளுநர் ரவி.. நீட் மசோதாவிற்கு ஒப்புதல் தர முடிவு? நடந்தது என்ன?
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளிக்க போவதாக பிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து எப்படியாவது விலக்கு பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஆர். என் ரவிக்கு அனுப்பியது.
ஆனால் அரசு அனுப்பிய மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர். என் ரவி அதை திருப்பி அனுப்பினார். இதையடுத்து திமுக கட்சி ஆளுநரின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

பிரச்சனை
இது தமிழ்நாட்டு அரசியலில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்தியது. இதையடுத்து மீண்டும் ஆளும் திமுக சார்பில் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நீட் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த முறை ஆளுநர் சட்டப்படி மசோதாவை திருப்பி அனுப்ப முடியாது. இதை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை. ஆனால் இதற்கான காலக்கெடு எதுவும் இல்லை. இதனால் ஆளுநர் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.

திமுக முடிவு
இதையடுத்து திமுக ஆளுநருக்கு எதிராக கடுமையான முன்னெடுப்புகளை எடுத்தது. பிரதமர் மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் நீட் பற்றி பேசினார். டெல்லி, கேரளாவில் ஆளுநருக்கு எதிராக முதல்வர் பேசினார். அதன்பின் நாடாளுமன்றத்தில் கூட லோக்சபாவில் ஆளுநர் ரவியை திரும்ப பெற கோரி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதேபோல் ஆளுநரின் ஆதிகாரங்களை குறைக்கும் வகையிலும் திமுக சார்பில் மசோதா ராஜ்ய சபாவில் கொண்டு வரப்பட்டது.

டீ பார்ட்டி
இதெல்லாம் போக ஆளுநர் ரவி கொடுத்த டீ பார்ட்டியையும் திமுக புறக்கணித்தது. இது அனைத்திற்கும் நீட் தேர்வு விலக்கு மட்டுமே காரணமாக இருந்தது. இதனால் ஆளுநர் தரப்பிற்கு கடும் அழுத்தம் ஏற்பட்டது. அதோடு ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் கருப்பு கொடி காட்ட திராவிட இயக்கங்கள் சில முயன்றதாகவும் கூறப்பட்டது. மேலும் மேற்கு வங்கத்தில் இருப்பது போல இங்கும் ஆளுநரை ஆளும் தரப்பு எதிர்க்கும் என்று தகவல்கள் வந்தன.

ஆளுநர் இறங்கி வருகிறார்
இந்த நிலையில்தான் தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளிக்க போவதாக பிபிசி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது பற்றி ஆளுநர் அலுவலகம் சார்பில் தமிழ்நாடு அரசு தரப்பிற்கு முறையாக அறிவிப்பு செல்ல இருக்கிறதாம். சில கடைசி கட்ட குறிப்பு எழுதும் பணிகளை முடித்த பின் ஆளுநர் இதை டெல்லிக்கு அனுப்புவார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புவார் என்று கூறப்படுகிறது

உறுதி இல்லை
ஆனால் ஆளுநர் தரப்பில் இருந்து அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பு வெளியாகவில்லை. பிபிசி ஊடகத்திற்கு ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளது. இரண்டு தரப்பு மோதல் சூழலை தணிக்கும் விதத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாம். கிடப்பில் உள்ள வேறு சில மசோதாக்கள் மீதும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications