எல்லாம் மோடி வந்த அப்பறம்தான்.. தமிழ்நாடு மாடலை தாக்கிய ஆளுநர் ரவி.. என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடலை ஆளுநர் ஆர். என் ரவி விமர்சனம் செய்து பேசியது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. ஜிடிபி பங்கீட்டில் மஹாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழ்நாடுதான் உள்ளது. மருத்துவர்கள் எண்ணிக்கை, பட்டப்படிப்பு படிப்பவர்கள் எண்ணிக்கை, பெண்கள் கல்லூரிகளுக்கு செல்வது என்று பல விஷயங்களில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது.
ஒப்பீட்டளவில் தமிழ்நாடு பல வளர்ந்த நாடுகள் அளவிற்கு அல்லது வளர்ந்த நாடுகளை விட அதிக முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதே நிதர்சனம்.

ஆளுநர் பேச்சு
முக்கியமாக பல்வேறு இலவச திட்டங்கள் காரணமாக ஏழை மக்களுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர்ந்து இருக்கின்றன. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடல் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்று ஆளுநர் ஆர். என் ரவி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக ஆளுநர் ஆர். என் ரவி நேற்று சென்னையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசினார். அப்போது, இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இல்லாமல் இருந்தது.

ரவி தமிழ்நாடு
குறிப்பிட்ட சிலர் மட்டும் வளர்ச்சி அடையும் மாடல் மட்டுமே நாடு முழுக்க இருந்தது. ஆனால் பிரதமர் மோடி வந்த பின்புதான் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தேவை. பிரதமர் மோடி வந்த பின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியம் ஆகி உள்ளது. இது மாநிலங்களுக்கு, மக்களுக்கு , பிராந்தியங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை போக்கி உள்ளது.

தமிழ்நாடு மாடல்
ஏன் தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலத்தில் கூட வளர்ச்சி வேறுபாடுகள் இருந்தன. மாநிலங்களுக்கு இடையில் சில துறைகளில் வேறுபாடுகள் இருந்தன. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வளர்ச்சி மாடல் டார்வினியன் வளர்ச்சி மாடலாக இருந்தது. இதில் தகுதி படைத்தவர்கள் மட்டுமே வளர்ச்சி அடைந்தனர். பெருவாரியான மக்கள் வளர்ச்சி அடையாமல் பின் தங்கி இருந்தனர்.

மோடி தமிழ்நாடு
60 ஆண்டுகளாக இந்தநிலைதான் இருந்து வந்தது. ஏழைகள் திட்டங்களை பெற முடியவில்லை. மருத்துவ வசதி பெரிதாக எல்லோருக்கும் கிடைக்கவில்லை. கல்வி அறிவு எல்லோருக்கும் கிடைக்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி வந்த பின் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியம் ஆனது. அனைவருக்கும் அடிப்படை தேவைகளை வழங்கும் வளர்ச்சி மாடல் சாத்தியம் ஆனது. மக்கள் எல்லோருக்கும் அரசின் திட்டங்கள் சென்று சேர்ந்துள்ளது என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

ஆளுநர் ரவி ஸ்டாலின்
ஆளுநர் ரவி பொதுவாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை இதில் விமர்சனம் செய்திருந்தார். மாநிலங்களுக்கு இடையே வேறுபாடு இருப்பதாகவும், மாநிலத்திற்கு உள்ளே மக்கள் இடையே வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் நிகழ்கால அரசையோ. இதற்கு முன் இருந்த அரசையோ ஆளுநர் தனது உரையில் விமர்சனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications