தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்.. முக்கியமா இந்த மசோதா!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல், 2 முறை நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மேலும் முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறு குற்றங்களுக்கு சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்பட 9 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த அக்டோபர் 14 முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதில் தனியார் பல்கலைக்கழகங்கள், சித்த மருத்துவ பல்கலைக்கழகம் உருவாக்கும் சட்டம் உட்பட 18 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிதி பொறுப்புடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், மசோதாவை திருப்பி அனுப்பினார். அப்போது, "இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடப்பதால், அடுத்த நிதி ஆண்டுக்கும் நிதி ஒதுக்குவது சரியல்ல" என கடிதம் அனுப்பியிருந்தார். மேலும், மசோதாவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த மழைக்கால சட்டசபைக் கூட்டத்தில், ஆளுநரின் கருத்துகளை நிராகரித்ததுடன், மசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில், ஆளுநருக்கு இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட இந்த மசோதா உட்பட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
குறிப்பாக, தமிழ்நாடு நெடுஞ்சாலைகள், கடல் சார் வாரியம், தமிழ்நாடு மின் நுகர்வு அல்லது விற்பனை வரி திருத்த மசோதாக்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், எம்சி-க்களுக்கான ஓய்வூதிய உயர்வுக்கான தமிழ்நாடு சம்பளம் வழங்கல் திருத்த மசோதா, சிறு குற்றங்களுக்குச் சிறைத் தண்டனைக்கு பதிலாக அபராதம் விதிக்கும் மசோதா உள்ளிட்ட 9 மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications