தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநருக்கு மரியாதை உண்டு! ராஜ்பவன் விளக்கம்
சென்னை: தமிழக சட்டசபையிலிருந்து ஆளுநர் வெளியேறியது ஏன் என்பது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநருக்கு அதிக மரியாதை உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட ஊடக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் மொழி, கலாச்சாரம், மரபு உள்ளிட்டவையின் மீது ஆளுநருக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் உள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மரியாதை உண்டு.

ஒவ்வொரு நிகழ்விலும் ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறார். ஆளுநர் மனதிலும் எண்ணற்ற இந்தியர்கள் மனதிலும் பழமையான தொன்மையான தமிழ்மொழிக்கென தனி இடம் உள்ளது. மாநிலத்திலும் சரி தேசிய அளவிலும் சரி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ் கலாச்சாரத்தையும் தமிழ்மொழியையும் ஆதரித்து பேசி வருகிறார்.
அரசியலமைப்பையும் அரசியலமைப்பு கடமைகளையும் மதிப்பது என்பது ஆளுநரின் கடமையாகும். அது போல் தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுப்பதும் ஆளுநரின் அடிப்படை கடமையாகும். இது தேசத்தின் பெருமைச் சார்ந்தது.
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலோ அல்லது முடிவிலோ தேசிய கீதம் பாடப்படுகிறது. மாநில சட்டசபைகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது என்பது கட்டாயமானது. சட்டசபையில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை வைத்தும் ஆளுநரின் வேண்டுகோள் தொடர்ந்து வேண்டுமென்றே நிராகரிக்கப்படுகிறது.
இன்றைய தினம் சட்டசபை கூடியதும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்படாமல் இருந்ததை அடுத்து தேசிய கீதம் பாடுமாறு முதல்வரிடமும் சபாநாயகரிடமும் ஆளுநர் மரியாதையுடன் நினைவூட்டிய போதிலும் நிராகரிக்கப்பட்டது.
ஆளுநர் உரையின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்படாதது அரசியலமைப்பிற்கும் தேசிய கீதத்திற்கும் அவமரியாதை செய்வதாகும். இதனால்தான் ஆளுநர் , கடும் அதிருப்தியுடன் சட்டசபையை விட்டு வெளியேறினார். இதன் மூலம் அரசியலமைப்பின் மீதான மதிப்பையும் தேசிய கீதத்தின் மீதான மாண்பையும் ஆளுநர் கட்டிக் காத்துள்ளார் என ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
தமிழக சட்டசபையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவருக்கு காவல் துறை அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது.
Raj Bhavan Press Release: 1 pic.twitter.com/NiawrFS69h
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 6, 2025
இதையடுத்து அவர் சட்டசபையினுள் சென்ற போது அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் உரையை வாசிக்காமலேயே அங்கிருந்து புறப்பட்டார். ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதற்கு பதிலாக முதலில் தேசிய கீதத்தை இசைக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால் அதை அவர்கள் நிறைவேற்றவில்லை. அதனால் தான் வெளியேறிவிட்டதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறும். வரும் 8ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் நடைபெறுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications