கன்னியாகுமரிக்கு இன்று ஆளுநர் பயணம்.. கூட்டாலுமேடு கோயில் திருவிழா சமய மாநாட்டை தொடங்கி வைக்கிறார்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரிக்குச் செல்லவுள்ளார். நாகர்கோவிலில் உள்ள தனியார் பள்ளி கட்டட திறப்பு விழா மற்றும், கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா சமய மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ளார். ஆளுநர் வருகையையொட்டி, கவர்னர் அரசு விருந்தினர் மாளிகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கன்னியாகுமரி மாவட்டத்துக்குச் செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை 11.25 மணிக்கு புறப்பட்டு 12.45 மணிக்கு திருவனந்தபுரம் வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து கார் மூலமாக மதியம் 2.15 மணிக்கு நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகை செல்லவுள்ளார்.

ஆளுநர் வருகையையொட்டி நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசு விருந்தினர் மாளிகையில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு அங்கு ஓய்வெடுக்கவுள்ளார். பின்னர், மாலை 3.40 மணிக்கு வெள்ளிமலைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்லவுள்ளார்.
வெள்ளிமலையில் உள்ள தனியார் பள்ளி கட்டட திறப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்கவுள்ளார். மாலை 5 மணியளவில் அங்கு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லவுள்ளார்.
அதைத்தொடர்ந்து, மாலை 6.20 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் கோவிலுக்குச் செல்லவுள்ளார். அங்கு இரவு 7 மணிக்கு திருவிழா சமய மாநாட்டை ஆளுநர் தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்குச் சென்று தங்கவுள்ளார். பின்னர், நாளை (திங்கள்கிழமை) காலை 6.55 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடையவுள்ளார்.












Click it and Unblock the Notifications