நீட் தேர்வு விலக்கு மசோதா: ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தமிழக அரசின் நீட் தேர்வுக்கு விலக்குகோரும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில், தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தை அதிமுக புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, ஒன்றிய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுனர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுர மருத்துவக் கல்லூரியில் செயல்படும்
ஆளுநர் மாளிகை விளக்கம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களை இந்த மாசோதா பாதிக்கும் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதியே உரிய விளக்கத்துடன் சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நீட் ரத்து மசோதாவை சட்டசபையில் மறுஆய்வு செய்ய ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது.
மு.க.ஸ்டாலின் கடிதம்
அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின், பாஜக, திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அனைத்துக்கட்சிக்கூட்டம்
இந்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அப்போது, ஆளுநர் தெரிவித்துள்ள விளக்கத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நீட் தேர்வை பற்றிய உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, நீட் மசோதா குறித்து எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது.
மசோதாவில் மாற்றமில்லை
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு முன்னெடுக்கும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனை கூட்டத்தின் முடிவில், நீட் மசோதாவை எவ்வித மாற்றமும் செய்யாமல் ஆளுநருக்கு மீண்டும் அனுப்ப முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
அதிமுக புறக்கணிப்பு
நீட் விலக்கு தொடர்பாக இன்று நடக்கும் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர் அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் இன்றைய கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே பாஜக பங்கேற்காது என அறிவித்த நிலையில் அதிமுகவும் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.