அதெப்படி தமிழ்நாட்டில் காமராஜர் பெயரை உச்சரிக்காமல்... சோனியா காந்தியை சீண்டும் 'ஆளுநர்' தமிழிசை
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காமராஜர் பெயரை உச்சரிக்காததற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர்- தெலுங்கானா ஆளுநர்- தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக மகளிர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா- மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் இந்த மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இம்மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, ராஜீவ் காந்தி அவர்கள் பஞ்சாயத்து ராஜ் மற்றும் உள்ளூர் சுயராஜ்யங்களில் பெண்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க 33% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தார். இது அடிமட்ட மட்டத்தில் பெண்கள் தலைமைப் பாத்திரங்களில் நுழைவதற்கான முற்றிலும் புதிய கதவைத் திறந்தது.
சோனியா காந்தி பேச்சு: மக்களவையிலும் இதேபோன்ற மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று இந்திய தேசிய காங்கிரஸ் முன்னோடியாக இருந்து வழி நடத்தியது ஒரு முக்கியமான படியாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒருமித்த கருத்து இல்லாததால் மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் போனது. எங்களின் இடைவிடாத முயற்சியால் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா இறுதியாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் அரசாங்கம் காலக்கெடுவைக் குறிப்பிடாததால் இன்னும் நீண்ட காத்திருப்பு உள்ளது என குறிப்பிட்டார். மேலும் காந்தி, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியோரது பெண்கள் விடுதலைக்கான பங்களிப்பையும் சோனியா காந்தி சுட்டிக்காட்டி பேசினார்.

கருணாநிதியின் பங்களிப்பு: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து பேசுகையில், பாலின சமத்துவத்துக்காக போராடியவர். மதம், ஜாதி, மொழி, பிரதேசம் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் சமத்துவம் வேண்டும் என்று அவர் நம்பினார். அவர் தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட தலைவர் என புகழாரம் சூட்டினார்.

தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி: இந்த மாநாட்டில் மறைந்த பெருந்தலைவர் காமராஜர் குறித்து சோனியா காந்தி எதுவும் குறிப்பிடவில்லை என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வருத்தத்தையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார்கள். ஆனால் கிராமப்புற குழந்தைகளுக்கு வசதியாக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து தமிழக மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை கொடுத்த முன்னாள் முதல்வர் கர்மவீரர்,கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?. இவ்வாறு "ஆளுநர்" தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications