சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி! பதறிதுடித்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்த ஆளுநர் தமிழிசை!
சென்னை: சென்னை சாலிகிராமத்தில் சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி ஒருவருக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலுதவி சிகிச்சை வழங்கி மருத்துவமனை அனுப்பி வைத்தார்.
பொங்கல் நன்னாளில் மருத்துவ சேவையாற்றி மூதாட்டியின் உயிரை காப்பாற்றியதற்காக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவராக இருந்து பிறகு அரசியலுக்குள் நுழைந்தவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
உ.பி: அகிலேஷுடன் பீம் ஆர்மி சந்திரசேகர் ஆசாத் சந்திப்பு- பாஜக கூட்டணி எம்.எல்.ஏக்கள் 2 பேர் ராஜினாமா
தெலுங்கானா ஆளுநர்
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று பொங்கல் கொண்டாடினார். இதையடுத்து அவரை சந்தித்து வாழ்த்துப் பெறுவதற்காக ஏராளமானோர் திரண்டதால் அவர்களை சந்தித்து கொண்டிருந்த வேளையில், சாலையில் இருசக்கர வாகனத்திலிருந்து சித்ரா என்ற மூதாட்டி மயங்கி விழுந்த தகவலை அறிந்திருக்கிறார்.
மருத்துவமனை
இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் பதறித்துடித்து சென்று அந்த சித்ராவை பரிசோதித்து பார்த்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், உடனடியாக 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் அந்த மூதாட்டிக்கு தண்ணீர் கொடுத்த தமிழிசை, சித்ரா அம்மா எப்படி இருக்கீங்க என வாஞ்சையுடன் அந்த மூதாட்டியிடம் நலம் விசாரித்தார்.
மனிதநேயம்
இதனிடையே வெறுமனே 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அதில் ஏற்றி மட்டும் விடாமல், பிரபல தனியார் மருத்துவமனையை தொடர்பு கொண்டு பேசி உரிய சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொண்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் இந்த மனிதநேயமிக்க செயல் அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது. இந்தக் காலத்தில் ஒரு வார்டு கவுன்சிலரே பகட்டாகவும், பந்தாவாகவும் சுற்றி வரும் நிலையில், ஆளுநர் தமிழிசையின் எளிமையும், மனிதநேயமும் அவருக்கு சிறப்பு சேர்த்துக் கொடுத்திருக்கிறது.
மருத்துவர்
அரசியலுக்குள் நுழைவதற்கு முன்னர் தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தஞ்சை, சென்னை என பல ஊர்களில் அவர் மருத்துவராக சேவையாற்றி இருக்கிறார். ஆளுநர் பணிக்கு மத்தியிலும் அவ்வப்போது உடல்நலம் சார்ந்த பதிவுகளையும் மக்கள் நலன் கருதி அவர் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.