கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போனவர்கள்.. ஹைகோர்டில் அரசு முக்கிய தகவல்
சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணை வேகமாக நடைபெற்று வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோவை மாநகரில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஈஷா யோகா மையம்.. சத்குரு நடத்தி வரும் இந்தயோகா மையம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தியான மையமான இந்த இடத்திற்கு சென்று சிலர் காணாமல் போய்விட்டதாக வழக்கு நடந்து வருகிறது.

தென்காசி மாவட்டம் குலசேகரபட்டியை சேர்ந்தவர் விவசாயி திருமலை. இவர் காணாமல் போன தன்னுடைய சகோதரை மீட்டுதரக் கோரி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதில், தன் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கடந்த 2007 ம் ஆண்டு முதல் தன்னார்வலராக பணியாற்றி வந்ததாகவும், கடந்த ஆண்டு மார்ச் 2ம் தேதி,ஈஷா யோகா மையத்தில் இருந்து தன்னை தொலைப்பேசியில் அழைத்த கணேசன், திருமலை சொந்த ஊருக்கு வந்துள்ளாரா என கேட்டதோடு, 3 நாட்களாக ஈஷா யோகா மைத்திற்கும் வரவில்லை என்ற தகவலை தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் 5ம் தேதி ஈஷா யோகா மைய பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோவை மாவட்டம் ஆலாந்துறை காவல்நிலையத்தில் அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த காவல்நிலையம், ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துவதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனவே காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தி, காணாமல் போன தன் சகோதரர் கணேசனை மீட்டு, நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் விவசாயி திருமலை தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, இதுவரை 36 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும், விசாரணை வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு, விசாரணையை விரைந்து முடிக்க அரசு தரப்புக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications