நகராட்சி துறையை போல கூட்டுறவு பணியாளர்கள் தேர்விலும் ரூ.15 லட்சம் வசூல்.. அண்ணாமலை பகீர்
சென்னை: ஏற்கனவே, அமைச்சர் கே என் நேருவின் துறையில் பணி நியமனத்திற்கு பணம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில், நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ரூ. 10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருவதாகவும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னை தொடர்புகொண்டு புகார் தெரிவித்ததாகவும் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுபாட்டில் செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த பனியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்முகத்தேர்வு நாளை நடைபெறுகிறது. இந்த நேர்முகத்தேர்வில் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூல் நடப்பது பற்றி பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் கூறுவதாக, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.
இது தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:- பல லட்சம் தமிழக இளைஞர்கள், அரசுப் பணிக்காக பல ஆண்டுகள் தங்களை அர்ப்பணித்து, கடுமையாக உழைத்துக் கொண்டிருக்க, திமுக அமைச்சர்கள், அரசுப் பணிகளை விற்பனை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, அமைச்சர் திரு. கே.என். நேரு அவர்கள் துறையில் பணி நியமனத்திற்கு பணம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில், நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், ரூ. 10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னை தொடர்புகொண்டு புகார் தெரிவித்தனர்.
முன்னாள் சாராய அமைச்சர், இது போன்று, அரசுப் பணி நியமனத்துக்கு பணம் வாங்கியதால்தான், ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்பதையும், அமைச்சர் பதவியை இழந்தார் என்பதையும், திமுக அமைச்சர்கள் மறந்து விட்டார்களா அல்லது, வந்த வரை லாபம் என்று வாரிச் சுருட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சர்கள், அரசுப் பணி நியமனத்துக்காக பணம் வசூலிப்பது தெரியாத அளவுக்குப் பொறுப்பற்ற முதலமைச்சராக இருக்கிறாரா அல்லது அவருக்குத் தெரிந்தேதான் இவை எல்லாம் நடைபெறுகின்றனவா?
நாளை நடைபெறவிருக்கும் கூட்டுறவு அரசுப் பணியாளர்களுக்கான நேர்முகத் தேர்வில், நேர்மையான, திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். திமுக அமைச்சர் திரு. பெரியகருப்பன், தனது பொறுப்பை உணர்ந்து நேர்முகத்தேர்வு நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications