10 கோடி வரை கடன் தருவதாக சொன்ன அரசு! தங்கம் நகை அடமானம் கட்டாயமா? RBI அறிவிப்பை திரும்ப பெற கோரிக்கை
சென்னை: தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவி, லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் இப்போது ஒரு புதிய சிக்கலில் சிக்கியுள்ளன.. அதாவது வங்கியில் கடன் வாங்கப் போனால் சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு collateral இல்லாமல் கடன் வழங்க அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.. ஆனால், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு, இந்த சட்டத்தையே தலைகீழாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தைத் தொழில் முனைவோர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
பொதுவாக, ஒரு புதிய தொழில் தொடங்க வேண்டுமென்றால் வங்கியிடம் நிலமோ அல்லது நகையோ அடமானமாக வைத்தால்தான் கடன் கிடைக்கும் என்ற நிலை முன்பு இருந்தது..

தங்க நகை அடமானம்
ஆனால், திறமையான இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஒரு புரட்சிகரமான சட்டத்தைக் கொண்டு வந்தது.. அதாவது, சிறு மற்றும் குறுந்தொழில்களுக்கு collateral இல்லாமல் கடன் வழங்க அரசு பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.. குறிப்பாக, 2025ம் ஆண்டு இந்த பிணையில்லா கடன் உச்சவரம்பை 10 கோடி ரூபாயாக உயர்த்தி அரசு அறிவித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது..
எனினும் ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கை, தமிழகத்தின் குறுந்தொழில் முனைவோர் மத்தியில் இடியென வந்து இறங்கியுள்ளது..
ஆர்பிஐ அறிவிப்பு
கடந்த பிப்ரவரி 9ம் தேதி வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட அந்தச் சுற்றறிக்கையில், சிறு தொழில்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை collateral இல்லாமல் கடன் வழங்கும் வழிகாட்டுதல் குறிப்பிடப்பட்டுள்ளது.. அதுமட்டுமில்லாமல், கடன் கேட்க வருபவர்கள் "தன்னார்வ அடிப்படையில்" தங்கம் அல்லது வெள்ளியை அடமானமாகத் தந்தால் வங்கிகள் அதனை ஏற்றுக்கொண்டு கடன் வழங்கலாம் என்றும் ஒரு புதிய விதியைப் புகுத்தியுள்ளது..
இதற்கு தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமான "டான்ஸ்டியா" கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக அந்த சங்கத்தின் தலைவர் வாசுதேவன் கூறும்போது, "கடந்த 2025ம் ஆண்டு மத்திய அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது.. அதன்படி, எந்தவிதமான சொத்துப் பிணையும் இல்லாமல் சிறு தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் அளவை 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தியது..
இது பலருக்கும் பெரிய நம்பிக்கையைத் தந்தது.. ஆனால், கடந்த பிப்ரவரி 9ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை அதற்கு நேர்மாறாக இருக்கிறது..
அதில், சிறு தொழில்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரைதான் பிணையில்லாமல் கடன் தர வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.. அதுமட்டுமில்லாமல், கடன் வாங்குபவர்கள் "விருப்பப்பட்டால்" தங்கம் மற்றும் வெள்ளியை அடமானமாக வைக்கலாம் என்றும் ஒரு வாசகத்தைச் சேர்த்துள்ளது.. இதுதான் இப்போது பெரிய வில்லங்கமாக மாறியிருக்கிறது..
நகைக்கடன்
"தன்னார்வ அடிப்படையில்" என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு, வங்கி அதிகாரிகள் இனிமேல் தங்கம் கொடுத்தால் தான் கடன் தருவோம் என்று மறைமுகமாக நெருக்கடி கொடுப்பார்கள் என்று டான்ஸ்டியா அஞ்சுகிறது.. ஒரு சாமானிய மனிதன் வங்கியில் கடன் கேட்கச் செல்லும்போது, அவரிடம் நகையைக் கேட்டால் அவர் எப்படி மறுக்க முடியும்? அந்த சூழலில் இது "தன்னார்வம்" கிடையாது, அது ஒரு "கட்டாயம்" ஆகிவிடும் என்பதே நிதர்சனமான உண்மை..
இதனால் பிணையில்லாமல் கடன் வழங்கும் திட்டத்தின் நோக்கமே கெட்டுவிடும்.. ஏற்கனவே மூலப்பொருட்களின் விலை உயர்வு, சந்தையில் கடும் போட்டி என பல சவால்களை சந்தித்து வரும் சிறு தொழில் முனைவோருக்கு, இது ஒரு கூடுதல் சுமையாக வந்து சேர்ந்துள்ளது..
அரசு 10 கோடி ரூபாய் வரை கடன் வழங்கச் சொன்னாலும், ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் 20 லட்சம் வரை collateral இல்லாமல் கடன் வழங்கும் வழிகாட்டுதல் முறைகள் குறிப்பிடப்பட்டிருப்பது, 10 கோடி ரூபாய் வரையிலான பிணையில்லா கடன் அறிவிப்புடன் முரண்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது..
சொத்துக்கள்
சொத்து இல்லாத சாதாரண திறமையுள்ள ஒரு தொழிலாளி முதலாளியாக மாற வேண்டும் என்றால், இதுபோன்ற பிணையில்லா கடன் திட்டங்கள் தான் கைகொடுக்கும்.. ஆனால், இப்போது நகையைக் கேட்பது அவர்களை மனரீதியாகப் பின்வாங்கச் செய்துவிடும்..
தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குறு நிறுவனங்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி இந்தச் சர்ச்சைக்குரிய அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று டான்ஸ்டியா வலியுறுத்தியுள்ளது.. இது குறித்து ரிசர்வ் வங்கிக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதத்தையும் அந்த அமைப்பு அனுப்பியுள்ளது..
மத்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதும், வங்கி அதிகாரிகளின் பிடியில் இருந்து சிறு தொழில் முனைவோர் காக்கப்பட வேண்டும் என்பதும் இவர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.. ரிசர்வ் வங்கி தனது பிடிவாதத்தைக் தளர்த்தி, எளிய மக்களுக்கான இந்தச் சட்ட மாற்றத்தைத் திரும்பப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!












Click it and Unblock the Notifications