குரூப் 2 தேர்வு.. 6 கேள்வி தப்பு.. 9 கிரேஸ் மார்க் கொடுக்க டிஎன்பிஎஸ்சி உத்தரவு!
சென்னை: குரூப்-2 தேர்வில் 6 கேள்விகளுக்கு தவறான விடை விவகாரத்தில், அக் கேள்விகளுக்காக 9 மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்புத் துறை இளநிலை அலுவலர், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், நகராட்சி ஆணையாளர், உதவிப் பிரிவு அலுவலர் என 1,199 பணியிடங்களுக்கான காலியாக உள்ளன. அப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் பதவிக்கான போட்டித் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, குரூப்- 2 முதல்நிலைத் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.11) ஆம் தேதி நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 26 ஆயிரத்து 726 பேர் தேர்வை எழுதினர். இதில் பெண்கள் 3 லட்சத்து 54 ஆயிரத்து 245 பேரும், ஆண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 462 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 10 பேரும் இந்த தேர்வை எழுதினர். இந்தத் தேர்வினை தமிழ் வழியில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 868 பேரும், ஆங்கில வழியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 858 பேரும் எழுதினர். மாற்று திறனாளிகளுக்கு உதவுவதற்காக 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வு வினாத்தாளில், திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு ஈ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது சரியான பதில் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
ஈ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என். அண்ணாதுரை என்பதில் எது தந்தை பெரியாரின் பெயர் தவறாகவும், நாயக்கர் என சாதி பெயரையும் சேர்த்து அச்சிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தந்தை பெரியார் அவமதிக்கப்பட்டு உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்று 6 கேள்விகளுக்கு தவறான விடை கேட்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியியானது. இதையடுத்து குரூப் 2 தேர்வில் பெரியாரின் சாதி பெயரை குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது தவறு தான், இதுபோன்ற தவறுகள் இனி நடக்காது என டிஎன்பிஎஸ்சி வருத்தம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், குரூப் 2 தேர்வில் தவறான விடை கொடுக்கப்பட்டிருந்த 6 கேள்விகளுக்கு, ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் என்ற கணக்கில் 9 மதிப்பெண்கள் வழங்க வல்லுநர் குழுவிற்கு டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் ஆணை பிறப்பித்துள்ளார்.