கொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம்
Recommended Video

சென்னை: தினகரன் கட்சி கொஞ்சம், கொஞ்சமாக உதிர்ந்து கொண்டிருப்பதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், கர்நாடகாவின் முதலமைச்சர் குமாரசாமி பலமாக அரசியல் செய்யும் பொழுது, ரங்கநாதர் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து ஆண்டவன் தண்ணீர் கொடுத்தால் தமிழகத்திற்கு கொடுக்கிறேன் என்று சொன்னவர்.

ஆனால், தற்போது தண்ணீர் தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இது ஆரோக்கியமான சூழ்நிலை தான். இதில் எந்தவித அரசியலும் உட்புக கூடாது . ஒருவேளை குமாரசாமி தனது பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் பேசுகிறாரா என்பதும் தெரியவில்லை என்றும் கூறினார்.
தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வேண்டும். அதற்கு தமிழகத்தில் இருக்கும் கூட்டணி கட்சிகளும் வழிமுறை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் ஸ்டாலின் போன்றவர்கள் இந்த பிரச்சனையில் வாய் திறக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். என்னைப் பொறுத்தவரை யாராக இருந்தாலும் காவிரி நதிநீர் ஆணையத்தின் கட்டளைப்படி தண்ணீர் திறந்து விட்டு தான் ஆக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தினகரன் ஆதரவு நாளேட்டில் எங்கள் கட்சியை பற்றி சொல்வதற்கு எல்லாம் பதில் கூற விரும்பவில்லை. முதலில் தினகரன் கட்சி முழுமையாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். தினகரன் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து போய் கொண்டிருக்கிறது என்றும் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்தார்.












Click it and Unblock the Notifications