இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு.. கிராம நத்தம் பட்டாக்களை இனி ஈசியாக எடுக்கலாம்.. எப்டினு பாருங்க
சென்னை: தமிழகத்தில் 245 தாலுகா கிராம நத்தம் பட்டாக்களை ஆன்லைனில் இனி எளிதாக பதிவிறக்கம் செய்வதற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மீதமுள்ள தாலுகா நத்தம் இடங்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. அந்த பணிகள் முடிந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம நத்தம் இடங்களையும் மக்கள் எளிதாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
நிலம் வாங்குவதை விட அதை பாதுகாப்பதுதான் மக்களுக்கு உள்ள பெரும் சவாலாக உள்ளது. இதனால், நில மோசடிகளை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நில ஆவணங்களில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு செய்து வருகிறது.

பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையம் வழியாக நிலம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள https://eservices.tn.gov. in/ என்ற இணையதளம் தமிழக அரசால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இணைய சேவையில் இருந்து பட்டா மாறுதல், பட்டா - சிட்டா விவரங்கள், அரசு புறம்போக்கு நிலம், நகர நில அளவை போன்ற தகவல்களை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இந்த தகவல்களை கொண்டே ஒரு நிலத்தின் உரிமையாளர் யார்? நிலத்தின் அளவு எவ்வளவு இருக்கிறது போன்ற தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள முடியும். இந்த தகவல்களை வைத்து, நிலம் வாங்கும் போது அவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்து, மோசடிகள் எதுவும் ஏற்படாமல் தப்பித்துக்கொள்ள முடியும்.
அரசின் இந்த இணையதளத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நத்தம் பகுதிகளையும் தெரிந்து கொள்ளும் வசதி கொண்டு வரப்பட்டது. எனினும், குறிப்பிட்ட தாலுகாவில் உள்ள இடங்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் நிலை இருந்தது. இந்த நிலையில்தான் தற்போது, 245 தாலுகாக்களில் உள்ள கிராமங்களிலும் உள்ள நத்தம் குடியிருப்பு விவரங்களை அறிந்து கொள்ள வசதி கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
அதாவது, அரசின் இணையதளத்தில் பட்டா விவரங்களை பார்க்கும் போது, மாவட்டம், தாலுகா, கிராம விவரங்களை தேர்வு செய்ய முடியும். அப்படி தேர்வு செய்யும் போது, நத்தம் என்ற ஒரு செக்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும். அதனை செலக்ட் செய்தால் நத்தம் தொடர்பான பட்டா வரைபட விவரங்களை பொதுமக்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் உள்ள 317 வருவாய் தாலுகாக்கள் இருக்கின்றன. இதில், நகர பகுதிகள் தவிர 312 தாலுக்காக்களில் கிராம நத்தங்கள் உள்ளன. தற்போது 245 கிராம நத்தம் இடங்களின் பட்டா விவரங்களை பெற இந்த இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளளது. ஏனைய 57 தாலுகா கிராம நத்த இடங்களை பதிவு செய்யும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே, அடுத்த மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த பணிகள் முடிந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம நத்த இடங்களையும் மக்கள் எளிதாக ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ள முடியும். இது மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக அமையும். இந்த ஆவணங்கள் மூலம் மோசடிகள் நடைபெறாமல் தடுக்க முடியும்.
ஒரு நிலத்தை பொறுத்தவரை நஞ்சை, புஞ்சை, விவசாயம் நடக்காத இடத்தை தரிசு நிலம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகளை நத்தம் என ஆங்கிலேயர்கள் வரையறுத்தனர். இந்த நத்தம் பகுதியில் முதலில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு அரசு சார்பாக பட்டா வழங்கப்பட்டது. இந்த இடத்திற்கு பத்திரம் எதுவும் இருக்காது என்பதால் பட்டா வழங்கப்படுகிறது.
நத்தம் இடத்தில் முதலில் ஆக்கிரமித்தவர்கள் பெயருக்கு பட்டா கொடுக்கப்படுகிறது. பிறகு அந்த பட்டா அடிப்படையில் பத்திரப்பதிவு செய்யப்படும். இது பின்னர் வேறு ஒருவருக்கு கிரையம் செய்யப்படுகிறது. அந்த கிரையம் அடிப்படையில் இடம் வாங்கியவர்களுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications