101-வது வயதை தொட்ட மீனாட்சி பாட்டி... திருவொற்றியூரில் பிறந்த நாள் விழா கோலாகலம்!
சென்னை : சென்னை திருவொற்றியூரில், ஆயிரம் பிறைக்கு மேல் கண்டவரும், ஐந்து தலைமுறைகளை பார்த்தவருமான மீனாட்சி பாட்டி, தனது 101-வது பிறந்த நாளை, உறவினர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.
Recommended Video
திருவெற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் அருகே, மறைந்த சிவராம சாஸ்திரி என்பவரின் மனைவி மீனாட்சி என்ற பட்டம்மாள். அனைவராலும் மீனாட்சி பாட்டி என்று அழைக்கப்படும் இவருக்கு 100 வயது முடிந்து, இன்று 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். மீனாட்சி பாட்டிக்கு, 3 ஆண்களும் 2 பெண்களும் உள்ளனர். இந்த குடும்பத்தில் ஏழு பேரன்களும் ஐந்து பேத்திகளும் உள்ளனர். அந்த பேரன் பேத்தி மூலம் நான்கு கொள்ளு பேரன்களும் ஏழு கொள்ளு பேத்திகளும் உள்ளனர்.
இதில் கொள்ளு பேரன் மூலம் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை, மீனாட்சிப் பாட்டிக்கு எள்ளு பேரன் என்று அழைக்கப்படுகிறார். மீனாட்சி பாட்டி ஐந்து தலைமுறைகள் கண்டவர். ஆயிரம் பிறை கண்ட மீனாட்சி பாட்டியின் பிறந்த நாளை, உற்சாகமாகவும், விமர்சையாகவும் கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து, சங்கரா காலனியில் உள்ள திருமண மண்டபத்தில், இதற்காக வேத விற்பனர்கள் சிறப்பு பூஜை செய்து, மீனாட்சி பாட்டியை புனித நீராட்டி, புத்தாடை அணிய வைத்து மேடையில் அமர வைத்தனர். கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் நட்சத்திர கோமம் ஆயுசு ஹோமங்களை 11 சாஸ்திரிகள் 11 நடத்தினர். குடும்பத்தினர் சீர்வரிசை பணமாலை அணிவித்து, 100 வயதை கடந்த மீனாட்சி பாட்டியிடம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, ஏராளமானோர் ஆசீர்வாதம் பெற்றனர்.
மீனாட்சி பாட்டி தனது எள்ளு பேரனை தூக்கி கொஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. 100 வயதை கடந்த பிறகும் மீனாட்சி பாட்டி அவரது சொந்த வேலைகளை அவரே செய்து கொள்கிறார். அப்பகுதியில் உள்ள உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய்நொடியில் உள்ளவர்களை, மீனாட்சி பாட்டி ஆசீர்வாதம் வழங்குவது, திருநீறு பூசுவது, சுளுக்கு எடுப்பது உட்பட பல உதவிகளை செய்து அனைவரிடமும் அன்பும், கருணையுமாக இருந்து வருகிறார்.