ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு! அரசியல் வாழ்க்கை கேள்விக்குறி! ஆதரவாளர்கள் அதிர்ச்சி!
சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
ஒன் மேன் ஷோவாக அதிமுகவில் இனி எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்க உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை கேள்விகுறியாகி உள்ளது.
இதனால் அவரை நம்பி அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிர்வாகிகளின் அரசியல் எதிர்காலம் இனி என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீதிமன்றம் குட்டு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக் கோரியும் தன் கவனத்துக்கு வந்த 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானம் எதையும் நிறைவேற்றத் தடை விதிக்க கோரியும் ஓ.பன்னீர்செல்வம் உயர் நீதிமன்றத்தை நாடினார். 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற காரசார வாதத்திற்கு பிறகு தீர்ப்பளித்த நீதிபதி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என தீர்ப்பளித்தார். தலையில் இடி இறங்கியதை போன்ற இந்த தீர்ப்பை கேட்டு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

எடப்பாடி ராஜ்ஜியம்
நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஏகமனதாக பொதுக்குழு உறுப்பினர்களால் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படவுள்ளார். இதனால் இனி அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்குவதோடு அவரது ராஜ்ஜியம் தான் கொடிகட்டி பறக்கும். எடப்பாடி பழனிசாமி இப்படி ஒன் மேன் ஷோவாக வலம் வர உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
ஓ.பன்னீர்செல்வம் பக்கம் தான் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்த முக்கிய நிர்வாகிகள் பலர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். இதனிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. ஆனால் அவர் அவ்வாறு மேல்முறையீடு செய்து அது விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே பொதுச்செயலாளர் நாற்காலியில் அமர்ந்துவிடுவார் எடப்பாடி பழனிசாமி.
Recommended Video

எம்ஜிஆர் ஜெயலலிதா வரிசையில்
அதிமுக வரலாற்றில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் வரிசையில் இப்போது எடப்பாடி பழனிசாமியும் இடம் பிடித்துவிட்டார். சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் ஜானகி வரிசையில் வரலாற்றில் இருந்து ஒரங்கட்டப்பட்டுள்ளனர். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் அடுத்தக் கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications