ஆந்திராவில் கொலை.. சென்னை கூவத்தில் உடல்! ஸ்கெட்ச் போட்ட பவன் கல்யாண் கட்சி நிர்வாகி.. சிக்கியது எப்படி?
சென்னை: மனைவியை அந்தரங்கமாக படம் பிடித்ததால், ஆத்திரத்தில் கொலை செய்த வாலிபர், அவரது உடலை காரில் கொண்டு வந்து சென்னை கூவம் ஆற்றில் வீசிய பவன் கல்யாண் கட்சி பிரமுகர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர். சினிமாவை விஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கூவம் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்றை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கோண்டனர். இந்த விசாரணையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

சென்னை கூவத்தில் ஆண் சடலம்
சென்னை ஏழுகிணறு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மூலக்கொத்தலம் எம்.எஸ்.நகர் அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் உள்ள கூவம் பகுதியில் கடந்த 8 ஆம் தேதி அன்று ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை மீட்ட போலீசார் சந்தேக மரணம் என வழக்கு தொடர்ந்தனர். உடற்கூராய்வு அறிக்கையில், அந்த நபர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், காரில் வந்த ஒரு கும்பல் பிணத்தை வீசி சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காரின் பதிவு எண் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், கூவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ஸ்ரீகாளகஸ்தி பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசலு என்கிற ராயுடு (வயது 22) என்பது தெரியவந்தது.
பவன் கல்யாண் கட்சி நிர்வாகிகள்
மேலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியின் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியை சேர்ந்த பிரதிநிதி சந்திரபாபு வீட்டில் வேலைக்காரராக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக சந்திரபாபு (35), அவரது மனைவி வினுதா கோட்டா (31), ஜனசேனா கட்சி தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த சிவகுமார் (36), கோபி (24), ரேணிகுண்டாவை சேர்ந்த கார் டிரைவர் ஷேக் தாசர் (23) ஆகிய 5 பேரை திருத்தணி பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்தனர்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் விவரம் வருமாறு:- கொலை செய்யப்பட்ட ராயுடு, ஜனசேனா நிர்வாகி சந்திரபாபு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். சந்திரபாபுவின் மனைவி வினுதா கோட்டா ஆடை மாற்றும் போது அதை செல்போனில் ரகசியமாக படம் பிடித்துள்ளார். இந்த தகவல் சந்திரபாபுவுக்கு தெரிந்துள்ளது.
உடனே ஆத்திரம் அடைந்த சந்திரபாபு, ராயுடுவிடம் இது பற்றி கேட்டுள்ளார். இதில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ பஜாலா சுதீர் ரெட்டியின் ஆதரவாளரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வினுதா கோட்டாவின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோவை அனுப்பியது தெரிய வந்துள்ளது. இதனால் கோபம் அடைந்த சந்திரபாபு, ராயுடுவை தனது வீட்டில் கட்டிப்போட்டுள்ளார்.
இதுதான் சந்தர்ப்பம் என்று
4 நாட்களாக அடித்து துன்புறுத்தியுள்ளார். இதற்கிடையே, 7 ஆம் தேதி கழிவறை சென்ற ராயுடு கழிவறை கதவை பூட்டிக்கொண்டு வெளியே வர மறுத்து இருக்கிறார். இதனால், கோபம் அடைந்த சந்திரபாபு மற்றும் அவரது ஓட்டுநர் ஷேக் தாசர் இருவரும் கதவை உடைத்து ராயுடுவை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர். இந்த கொலை வெளியே தெரிந்தால், தனது அரசியல் எதிர்காலம் போய் விடும் என அஞ்சிய சந்திரபாபு, கொலையை மறைக்க திட்டமிட்டுள்ளனர்.
சந்திரபாபுவின் மாமனார், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காரில் செல்ல இருக்கும் தகவல் சந்திரபாபுவுக்கு கிடைத்தது. இதுதான் சந்தர்ப்பம் என்று கருதி அதே காரில் அவருக்கு தெரியாமல் ராயுடுவின் பிணத்தை ஏற்றிக்கொண்டு சிவகுமார், கோபி, ஷேக் தாசர் ஆகியோருடன் சந்திரபாபு வந்துள்ளார். அவர்கள் வந்த கார் தமிழ்நாட்டு எல்லையில் திடீரென்று பழுதாகி நின்றுள்ளது.
கூவம் ஆற்றின் ஓரத்தில்
இதனால் சந்திரபாபு 2 கார்களை வரவழைத்துள்ளார். அதில் ஒரு காரில் ராயுடுவின் பிணத்தை ஏற்றிவிட்டு மற்றொரு காரில் சந்திரபாபு தனது மாமனாருடன் மருத்துவமனைக்கு சென்று உள்ளார். சிவகுமார், ஷேக் தாசர், மற்றும் கோபி ஆகிய 3 பேரும் சென்னை வந்து ஏழுகிணறு பகுதியில் கூவம் ஆற்றின் ஓரம் காரிலிருந்து ராயுடுவின் சடலத்தை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். போலீசாரின் புலன் விசாரணையில் கூண்டோடு கைதாகி உள்ளனர்.
ஆந்திராவில் கொலை செய்துவிட்டு, இங்கே உடலை வீசி சென்றுள்ளனர். சிகிச்சைக்காக வந்து சென்ற வகையில் இந்த வழி தெரிந்திருந்ததால், இங்கே அவர்கள் வீசி சென்று இருக்கிறார்கள். கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்திருக்கிறார்கள் எனவும் ஆனால் போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்து இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications