ஜிஎஸ்டி வரி குறைப்பு.. லட்சக்கணக்கில் குறைந்த மாருதி சுஸுகி கார்களின் விலை.. புதிய விலை என்ன?
மும்பை: மாருதி சுஸுகி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தியை அறிவித்துள்ளது. சமீபத்தில் ஆட்டோமொபைல்களுக்கான ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதன் முழுப் பலனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. இன்று முதல் இந்த புதிய கட்டணம் அமலுக்கு வந்துள்ளது.
இந்த ஜிஎஸ்டி குறைப்பால், மாருதி சுஸுகியின் என்ட்ரி-லெவல் மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ. 1.29 லட்சம் வரை குறையவுள்ளன. பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக, செப்டம்பர் 22, 2025, திங்கட்கிழமை முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று கூறப்பட்ட நிலையில் இன்று புக்கிங் செய்தவர்களுக்கே அந்த பலன் சென்றடைந்து உள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரி குறைப்பு
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டத்தில், சிறிய கார்களுக்கான வரியில் பெரிய குறைப்பு அறிவிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் வரி (ஜிஎஸ்டி) விகிதம் 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, மேலும் 1% செஸ் வரியும் நீக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, நான்கு மீட்டருக்கும் குறைவான (sub-four-metre) கார் பிரிவில் வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் இந்த வகை கார்கள் அதிகம் பயன்பெறுகின்றன.
மாருதி சுஸுகியின் பல பிரபலமான மாடல்கள் இந்த பிரிவில் வருவதால், வாடிக்கையாளர்கள் பல கார்களுக்கு குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையை எதிர்பார்க்கலாம். திருத்தப்பட்ட ஜிஎஸ்டி விகிதங்களுக்குப் பிறகு, மாருதி சுஸுகி கார்களின் விலைகள் எவ்வாறு இருக்கும் என்பது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும்.
ஜிஎஸ்டி வரி மாற்றம்
எக்ஸ்-ஷோரூம் விலைகளில் உள்ள இந்த குறைப்புகள் மாடல் வாரியாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பை மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட்டின் நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனச் செயலர் சஞ்சீவ் க்ரோவர் உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல் பொருட்களை தள்ளுபடி விலைக்கு விற்பனை செய்யும் போது, இனி அந்த தள்ளுபடி விலைக்கே ஜிஎஸ்டி கட்டலாம் என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) தெரிவித்துள்ளது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC), நிறுவனங்கள் தங்கள் விற்பனையாளர்களுக்கு வழங்கும் தள்ளுபடிகள் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் முக்கிய விளக்கங்களை வெளியிட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசி கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி விகிதங்கள் குறைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தள்ளுபடி விலையில் விற்பனை ஆகும் பொருட்கள்
சப்ளையர்களின் இருப்பு நிலையில் உள்ள பொருட்களை விற்க ஊக்குவிக்கும் வகையில், டீலர்களுக்கு பெரும்பாலும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு புதிய மொபைல் போன் மாடல் அறிமுகமாகும்போது, ஏற்கனவே டீலரிடம் உள்ள பழைய மாடலின் விற்பனை பாதிக்கப்படலாம். இதுபோன்ற சமயங்களில், ரூ.20,000 மதிப்புள்ள ஒரு சாதனத்திற்கு நிறுவனங்கள் 10% தள்ளுபடி வழங்கலாம்.
இதனால், சில்லறை விற்பனையாளர் அந்த சாதனத்தை ரூ.18,000க்கு விற்பனை செய்வார். ஆனால், வரி அதிகாரிகள் பெரும்பாலும் ரூ.20,000க்கு ஜிஎஸ்டி செலுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். தற்போது, தள்ளுபடி செய்யப்பட்ட விலைக்கு மட்டுமே வரி செலுத்தப்பட வேண்டும் என்று துறை தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், சில சமயங்களில் நிறுவனம் சில்லறை விற்பனையாளரை தள்ளுபடி விலையில் விற்குமாறு கேட்கிறது. இந்த தள்ளுபடியானது விநியோகஸ்தர் மூலம் வழங்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், சில்லறை விற்பனையாளருடன் நேரடி ஒப்பந்தம் இல்லாததால், ரூ.20,000க்கு வரி செலுத்தப்பட வேண்டும் என்று துறை கருதுகிறது.












Click it and Unblock the Notifications