வந்தது அறிவிப்பு.. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.. மாடுபிடிவீரர்கள் குஷி
ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.. அதன்படி, ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளருக்கு மட்டுமே அடையாள அட்டையுடன் அனுமதி வழங்கப்படும், காளையுடன் வருபவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் பொங்கல் பண்டிகையையொட்டி, ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடைபெறும்.
கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக பொது முடக்கம் அமலில் உள்ளது.. அதனால் வரும் ஜனவரியில் ஜல்லிக்கட்டு நடக்குமா என்ற சந்தேகமும் எழுந்தது..
ஒரே மர்மம்.. 2021 எப்படி இருக்கும்.. மனிதகுலத்தை டிராகன் கைப்பற்றுமாம்.. வைரலாகும் பாபாவங்கா கணிப்பு
கோரிக்கை
இதனிடையே, தமிழக அரசு முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு கமிட்டிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் கோரிக்கை விடுத்தபடியே இருந்தனர்.
அறிவிப்பு
இந்நிலையில், 50 சதவித பார்வையாளர்கள், 50 சதவீத மாடுபிடி வீரர்கள் ஆகியோர் பங்கேற்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சான்றிதழ்
அதன்படி, ஒரு காளையுடன் உரிமையாளர், ஒரு உதவியாளருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காளையுடன் வருபவர்கள் கொரோனா டெஸ்ட் செய்து நெகட்டிவ் என்று சான்று பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வட நாடு நிகழ்ச்சிகளில் அதிக பட்சமாக 300 பேர் வரை கலந்துகொள்ளலாம். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு 7 நாட்களுக்கு முன்பு பதிவு செய்து அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்... போட்டிகளை காண 50 சதவீதம் பார்வையாளர்களே அனுமதிக்கப்படுவர்.
மகிழ்ச்சி
அதேபோன்று போட்டியில் பங்கேற்கும் வீரர்களும் கொரோனா டெஸ்ட் செய்து நெகட்டிவ் என சான்று பெற்றிருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியை மேற்பார்வை செய்யும் அலுவலர்கள், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் கொரோனா டெஸ்ட் கட்டாயம் செய்திருக்க வேண்டும். தமிழக அரசின் இந்த அறிவிப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தும் ஏற்பாடுகளும் சுறுசுறுப்படைந்து உள்ளன!