கிண்டி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு கத்திக் குத்து! ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதி
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதால் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ 230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை தரை தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையில் இதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரகவியல், புற்றுநோய் உள்ளிட்ட பல்துறை சிகிச்சைகள், 1000 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.
கடந்த 2021-ம்ஆண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளன்று, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், புதிதாக பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டிய 15 மாதங்களிலேயே மருத்துமனை திறக்கப்படுகிறது.
6 தளங்கள் கொண்ட 3 கட்டிடங்கள் 4.89 ஏக்கர் நிலத்தில் சுமார் 51,429 ச.மீ.,பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 'ஏ' பிளாக் ரூ.78 கோடியில் 16,736 சதுர மீட்டர் பரப்பளவில் நிர்வாக கட்டிடம் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுகளுடன் இயங்கும். 'பி' பிளாக் ரூ.78 கோடியில் 18,725 சதுர மீட்டர் பரப்பளவில் அறுவை சிகிச்சை பிரிவு இயங்கும். 'சி' பிளாக் 15,968 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.74 கோடியில் கதிரியக்க நோய்க்கான பிரிவு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டதிலிருந்தே இங்கு பணியாற்றி வருபவர் டாக்டர் பாலாஜி. இவர் புற்றுநோய் சிகிச்சை பிரிவின் தலைவராக உள்ளார். இந்த மருத்துவமனையில் பெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தனது தாய் காஞ்சனாவை புற்றுநோய் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
அங்கு அந்த பெண்ணுக்கு 6 முறை கீமோ தெரபி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த சிகிச்சைகளில் விக்னேஷ் திருப்தி அடையாததால் மருத்துவர் மீது ஆத்திரத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்றைய தினம் கத்தியுடன் வந்த விக்னேஷ், மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதம் செய்ததாக தெரிகிறது.
அப்போது ஆத்திரமடைந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், டாக்டர் பாலாஜியின் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து தப்பியோடிய விக்னேஷை அங்கிருந்த மருத்துவமனை காவலர்கள் துரத்தி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் அதிக ரத்த போக்கு அடைந்த மருத்துவர் பாலாஜி, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இந்த நிலையில் கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். தற்போது மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்ட தனது தாயை கிண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி விக்னேஷ் என்பவர் மருத்துவர் பாலாஜியை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. கழுத்தில் காயமடைந்த அந்த மருத்துவர் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications