ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எதிரொலி... சிகிச்சைக்காக தனி விமானத்தில் சென்னைக்கு வந்த குஜராத் தொழிலதிபர்..!
சென்னை: குஜராத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு எதிரொலியாக, சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் சிகிச்சைக்காக தனிவிமானத்தில் சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீயாக பரவி வரும் நிலையில், குஜராத் மாநிலத்தில் அதன் பாதிப்புகள் ஏராளமாக உள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.
இதுமட்டுமல்லாமல் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் நாளுக்கு நாள் அங்கு அதிகரித்து வருகின்றன. இதனால் அம்மாநில அரசு மத்திய அரசின் தயவை நாடியுள்ளது.
இந்நிலையில் சூரத்தை சேர்ந்த முக்கிய தொழிலதிபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி சூரத்தில் இருந்து தனிவிமானத்தில் அழைத்து வரப்பட்ட அந்த தொழிலதிபர், சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் தொழிலதிபரை விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு வசதியாக, தனியார் மருத்துவமனை தரப்பிலிருந்து சிறப்பு அனுமதி பெறப்பட்ட ஆம்புலன்ஸ் கேட் எண் 6 -ல் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தாமதமின்றி அழைத்துச்செல்லப்பட்டது.
விமான நிலைய ஆணையம் தரப்பிலும், தனியார் மருத்துவமனை தரப்பிலும் யார் அந்த தொழிலதிபர் என்பது குறித்த எந்த விவரத்தையும் வெளியிடாதது குறிப்பிடத்தக்கது. இதனிடையே வட இந்தியாவை சேர்ந்த வசதி படைத்தோர் பலர் சென்னை மற்றும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருவது அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தொலைநோக்குடன் தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பு திகழ்வதே பிறமாநிலத்தவர்களும் சிகிச்சைகாக இங்கு வருவதற்கு காரணமாகும்.