‘குஜராத் மாடல்.. இவங்க 8 பேரு’ பாஜக கட்டமைப்பையே மாற்ற வியூகம்- அண்ணாமலையின் மூவ்!
சென்னை : தமிழ்நாட்டில் பாஜகவை பலப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் அண்ணாமலை தற்போது 'குஜராத் மாடல்' திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார்.
பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், அக்கட்சியில் மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இணைந்து வருவது தொடர்ந்து வருகிறது.
திமுக ஆட்சி மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளைக் கூறி செய்திகளில் இடம்பிடித்து வரும் அண்ணாமலை, 2024 தேர்தலில் வெற்றி பெற முக்கிய திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
ஆமா.. அண்ணாமலை இந்த விஷயம் பற்றி மட்டும் பேசுவதில்லை பார்த்தீங்களா? பாயிண்டுக்கு வந்த கொங்கு ஈஸ்வரன்
பாஜக
தமிழகத்தில் பா.ஜ.க வலுவாகத் தடம் பதிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக மக்கள் மத்தியில் ஆதரவைப் பெறுவதற்காக அக்கட்சியில் புது ரத்தம் பாய்ச்சி வருகின்றனர்.
இதற்காகவே கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்துவந்த அண்ணாமலையை அரசியலுக்கு கொண்டு வந்து தற்போது தமிழக தலைவராக்கி உள்ளனர்.
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்த பின்னர் அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அக்கட்சியின் செயல்பாடுகளில் வேகம் கூடியுள்ளது.
மாற்றுக்கட்சியினர்
தி.மு.க, அ.தி.மு.கவில் பெரிய பொறுப்புகளில் இருந்த முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏக்கள் பலரையும் கட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டு அதற்கான காய்நகர்த்தல்களை செய்து வருகிறது பா.ஜ.க. அவர்களை வைத்தே, அக்கட்சிகளின் பலம், பலவீனங்களை அறிந்து தேர்தல்களை எதிர்கொள்ளும் திட்டத்தில் அண்ணாமலை இருக்கிறார்.
மேலும், தி.மு.கவின் முக்கிய பிரமுகர்களின் வாரிசுகளை தங்கள் பக்கம் இழுப்பதையும் மெயின் வேலையாக செய்து வருகிறார் அண்ணாமலை. அவர்களைப் பயன்படுத்தி திமுகவுக்கு குடைச்சல் கொடுக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
வாரிசுகள்
திமுக பொதுச் செயலாளராக இருந்த அன்பழகனின் பேரன் அன்புகிரியை தங்கள் பக்கம் இழுத்தது பா.ஜ.க. சமீபத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவை கட்சியில் இணைத்து திமுகவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது. திமுக மட்டுமல்லாமல், கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் எம்.பியான முருகையாவின் மகன் ரமேஷையும் கட்சிக்குள் இழுத்துப்போட்டு செல்வாக்கை காட்டியுள்ளனர்.
அண்ணாமலை
அண்ணாமலை தலைவரான பிறகு தான் சொல்பவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் எனக் கூறிவந்தார். ஆனால், மூத்த நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், மேலிடத்தில் சொல்லி தனது திட்டத்தை செயல்படுத்தினார்.
அமித்ஷா சென்னை வந்து சென்ற சில நாட்களிலேயே பா.ஜ.கவில் புதிதாக 20 மாநில செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 59 மாவட்ட தலைவர்களும் நியமனம் செய்யப்பட்டனர். இப்போது தமிழகம் முழுவதும் பொறுப்பில் உள்ளவர்களில் பெரும்பாலோனார் அண்ணாமலையில் ஆதரவாளர்கள்தான்.
புதிய வியூகம்
2024ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல்தான் தமிழக பாஜகவின் இப்போதைய குறி. அதில் பாதிக்கு மேல் சீட்களை பெறவேண்டும் என அக்கட்சியினர் உழைத்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக குஜராத் பாஜக பாணியில் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார். இதனால் அடிமட்ட அளவில் பாஜகவை பலப்படுத்தலாம் என்கிற யோசனை உள்ளதாம். இதற்காக 8 மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் அண்ணாமலை.
குஜராத் மாடல்
குஜராத் பாஜக பாணியில், தமிழகத்தில் உள்ள அனைத்து பூத் கமிட்டிகளுக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட உள்ளனர். இதைச் செய்துவிட்டாலே வாக்கு வங்கியை உயர்த்திவிடலாம் என கணக்கு போடுகிறார் அண்ணாமலை.மேலும், 'இல்லந்தோறும் மோடி.. உள்ளந்தோறும் தாமரை' என்ற கோஷத்தை முன்வைத்து, தேர்தல் பணிகளையும் பா.ஜ.கவினர் துவங்க உள்ளனர். மற்ற கட்சிகளை விட விரைவாகவே தேர்தல் பணிகளைத் துவங்கவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.
8 மண்டலங்கள்
தமிழ்நாட்டை 8 பெருங்கோட்டங்களாக அதாவது மண்டலங்களாக பிரித்து தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கொங்கு மண்டலத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தேசிய அரசியலில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். கேரளா, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்ட வியூகங்களை வகுத்துள்ள அனுபவம் உள்ளவர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் பா.ஜ.க வெற்றிக்குக் காரணமாக இருந்தவர். இவர் மூலம் கொங்கு மண்டலத்தை பலப்படுத்தும் முயற்சிகள் நடக்கும்.
மண்டல பொறுப்பாளர்கள்
கன்னியாகுமரி மண்டலத்திற்கு பொதுச் செயலாளர் பாலகணபதி நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மண்டலத்திற்கு பா.ஜ.க தமிழக துணைத்லைவர் கே.பி.ராமலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் மண்டலத்திற்கு வினோஜ் பி.செல்வம், மதுரை மண்டலத்திற்கு கதலி நரசிங்க பெருமாள், திருச்சி மண்டலத்திற்கு கருப்பு முகானந்தம், வேலுார் மண்டலத்திற்கு முன்னாள் மேயர் கார்த்திகாயினி, சென்னை மண்டலத்திற்கு கரு.நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆக்ஷன் டீம்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த மண்டல பொறுப்பாளர்கள் மூலம், மாநிலம் முழுவதும் ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என கூட்டத்தை திரட்டி தங்களது இருப்பை வலுவாக நிறுவத் திட்டமிட்டு வருகின்றனர். ஏற்கனவே மாவட்ட தலைவர்களாக தனக்கு தோதான ஆட்களை நியமித்துள்ள அண்ணாமலை, பூத் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து விட்டால் கட்சி கட்டமைப்பையே வேற லெவலில் மாற்றி விடலாம் என பிளான் போட்டிருக்கிறாராம்.