இனி ஒரு குருதாஸ் தாஸ் குப்தா கிடைக்க மாட்டார்.. ஓய்வறியா போராளி.. மறக்க முடியாத சிவப்புச் சூரியன்!
சென்னை: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்களின் பாதுகாவலராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து உரிமைகளை வென்று கொடுத்த தேசத்தின் போற்றுதலுக்குரிய முதுபெரும் தொழிற்சங்கவாதி குருதாஸ் தாஸ்குப்தாவின் மறைவு இந்திய தொழிலாளர் வர்க்கத்துக்கு மாபெரும் இழப்பாகும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமாக ஏ.ஐ.டி.யூசி.யின் பொதுச்செயலராக தீரமுடன் போராடிய குருதாஸ் தாஸ்குப்தா அந்த இயக்கத்தின் நூற்றாண்டு நாளிலேயே கடைசி மூச்சை விட்டிருக்கிறார் என்பது வரலாற்றுப் பதிவு.
1950களில் மாணவர் பருவத்தில் மேற்கு வங்கத்தை கோட்டையாக கொண்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தம்மை இணைத்துக் கொண்டார் தோழர் குருதாஸ் தாஸ்குப்தா. 1957-ல் கொல்கத்தா அசுதோஷ் கல்லூரியில் மாணவர் சங்கத்தின் பொதுச்செயலாளரானார்.
அதன்பின்னர் மேற்கு வங்க அரசியலில் இளைஞர்களின் முகமாக மெல்ல மெல்ல விஸ்வரூபம் எடுத்தார் குருதாஸ் தாஸ்குப்தா. 1958 முதல் 1960 வரை ஒருங்கிணைந்த மேற்கு வங்க மாகாண மாணவர் சங்கத் தலைவர், 1967 முதல் 1977 வரை அகில இந்திய இளைஞர் கூட்டமைப்பின் மேற்கு வங்க பொதுச்செயலராக திகழ்ந்தார் குருதாஸ் தாஸ்குப்தா.

தலைமறைவு வாழ்க்கையும்
1965-ல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பின்னர் பல முறை தலைமறைவு வாழ்க்கையையும் தனதாக்கிக் கொண்டவர் அவர். மாணவர் இயக்கத் தலைவராக இருந்த குருதாஸ் தாஸ்குப்தா, தமது கவனத்தை தொழிலாளர்கள் பக்கம் திருப்பினார். 1970களில் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். இதனால் தேசிய அரசியலிலும் அவர் இடம்பிடித்தார்.

கட்சி நிலைப்பாட்டை மாற்றியவர்
இந்திராகாந்தி அம்மையார் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியபோது தேசமே கிளர்ந்து எழுந்து போராடியது. பல்லாயிரக்கணக்கான அரசியல் தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திரா காந்தியின் காங்கிரஸ் பக்கம் இருந்தது. அதனால் தொடக்கத்தில் அமைதி காத்தது. ஆனால் குருதாஸ் தாஸ்குப்தா எனும் நெஞ்சுரமிக்க தீரரால் அதை தாங்க முடியாமல் கட்சி தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார். ஒரு கட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அவசரநிலைக்கு எதிராக களமிறங்கியது. இதற்கான காரணகர்த்தாக்களில் குருதாஸ் தாஸ்குப்தாவும் ஒருவர் என்கிறார் மூத்த இடதுசாரித் தலைவர் பல்லாப் சென்குப்தா.

எம்பியாக அதகளம்
1980களில் நாடாளுமன்ற அரசியலுக்குள் நுழைந்தார். மூன்று முறை ராஜ்யசபா எம்.பி.யாகவும் (1985, 1988, 1994) 2 முறை லோக்சபா எம்.பி.யாகவும் (2004, 2009) பணியாற்றினார். தாம் எம்.பியாக பதவி வகித்த காலங்களில் பல்வேறு நாடாளுமன்ற குழுக்களில் பங்கேற்று திறம்பட செயலாற்றினார். ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தை ஊழல் குறித்த நாடாளுமன்ற குழு, 2 ஜி ஊழல் தொடர்பான நாடாளுமன்ற குழு ஆகியவற்றில் தமது வாதங்களை ஆணித்தரமாக முன்வைத்தார்.

2ஜி விவகாரத்தில் வெளுத்து கட்டியவர்
2011-ல் 2ஜி ஊழல் விவகாரத்தில் பிரதமராக இருந்த மன்மோகன்சிங்குக்கு ப.சிதம்பரத்துக்கும் தொடர்பில்லை என நாடாளுமன்ற கூட்டுக் குழு தலைவர் பிசி சாக்கோ கூறியதை கடுமையாக விமர்சித்தார். அப்போது குருதாஸ் தாஸ்குப்தா பேசியவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

ஏஐடியூசி பொதுச்செயலர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூசிவில் அகில இந்திய பொதுச்செயலாளராக பதவி வகித்தார். தமிழகத்தின் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டத்திற்கு பெரும் துணையாக இருந்தவர் தோழர் குருதாஸ் தாஸ்குப்தா என்கிறார் ஏஐடியூசி தமிழ் மாநிலச் செயலாளர் டி.எம். மூர்த்தி.

சிவசேனாவையும் சந்தித்தார்
குருதாஸ் தாஸ் குப்தா மறைவு குறித்து டி.எம். மூர்த்தி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், உலக மயத்தின் கொடூரத் தாக்குதலால் தொழிற்சங்க இயக்கம் திகைத்த போது, ஒற்றுமையே பலம் என்று,அனைத்து தொழிற்சங்க ஒற்றுமைக்கு புதிய வலிமை வடிவம் சேர்த்தவர். சிவசேனை அலுவல கத்துக்கும் நேரில் சென்று, பொது வேலைநிறுத்தத்தை ஆதரிக்கக் கேட்டவர்.

அரசு தொகுதியை உதவிக்கு தந்தவர்
தமிழகத்தில் நெய்வேலி லிக்னைட் காண்ட்ராக்ட் தொழிலாளர் போராட்டத்திற்கு முதுகெலும்பாய் நின்று அவர்களின்வேலைநிறுத்தங்கள் ஒவ்வொரு முறையும் வெற்றிபெற துணை நின்றவர். வரி ஏய்ப்புகளைக் கண்டறிய உதவியதற்காக அரசு தந்த பெரியவெகுமதித் தொகையை, காலிஸ்தான் மோதல்களில் இறந்தவர் களின் விதவைகள், குழந்தைகள் நல்வாழ்வுக்காகத் தந்தவர்.

விவசாய தொழிலாளர்கள் ஆவணம்
விவசாயத் தொழிலாளர் நிலையை ஆய்வு செய்த நாடாளுமன்றக் குழுவின் தலைவராகப் பணியாற்றி யவர். பழைய செங்கல்பட்டு மாவட்டம் முழுக்க இதற்காகப் பய ணித்தவர். அவர் சமர்ப்பித்த அறிக்கை விவசாயத் தொழிலாளர் பற்றிய அரிய ஆவணமாகும்.

வேலை நிறுத்த உரிமை போராட்டம்
அரசுப் பணியாளர் வேலைநிறுத்தம் செய்வதற்கு உரிமையில்லை என நீதிமன்றம் சொன்னபோது, அதனை வேலைநிறுத்தத்தால் முறியடிப்போம் என்று தொழிலாளர்களைத் திரட்டியவர்.ஏஐடியுசியின் நூற்றாண்டை ஆண்டு முழுவதும் கொண்டாட அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பேதிட்டமிட்டவர். அவர் நேசித்த ஏஐடியுசியின் நூற்றாண்டு பிறக்கும் நாளில் அவர் இயற்கையுடன் ஒன்றிவிட்டார். இந்தியத் தொழிற்சங்க இயக்கத்துக்கு மட்டுமல்ல, ஜன நாயகத்தை, மதச்சார்பின்மையை, சமூகநீதியை, சமதர்மத்தை நேசிக்கும் சக்திகளுக்கு அவரது மறைவு பேரிழப்பாகும் என குறிப்பிட்டிருப்பது புகழஞ்சலி மட்டுமல்ல.. அதுதான் நிதர்சனமே!
செஞ்சூரியனே! நீர் மறைந்தாலும் எழுகிறவர்தானே!












Click it and Unblock the Notifications