வழக்கு நடந்த போது எங்கே போனீங்க... கு.க. செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்த ஹைகோர்ட்
உரிமை மீறல் நோட்டீஸ் விவகாரத்தில் கு.க.செல்வம் எம்எல்ஏவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை: தமிழக சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்றது தொடர்பாக அனுப்பப்பட்ட உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாதத்தையே தன் வாதமாக ஏற்றுக்கொள்ளுமாறு சமீபத்தில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ கு.க செல்வம் தலைமை நீதிபதி அமர்வில் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது மனுவை நிராகரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணை நடந்தபோது எங்கே சென்றீர்கள்? என்று கேள்வி எழுப்பியதோடு கு.க.செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக சட்டசபை உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததை அடுத்து, அவர்களுக்கு எதிராக உரிமைக்குழு, நோட்டீஸ் அனுப்பியது.
உரிமைக்குழு நோட்டீசை எதிர்த்து, தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்..
இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டது. தடையை நீக்க கோரி தமிழக அரசும் மனுத்தாக்கல் செய்தது.
இந்த அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதிகள் ஏ.பி.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் கடந்த 12,13,14 ஆகிய மூன்று நாட்கள் விசாரிக்கப்பட்டன.
அப்போது தி. மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து வழக்கு தொடர்ந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், கே.பி.பி.சாமி இறந்து விட்டதாகவும், கு.க.செல்வத்துக்கு தாங்கள் ஆஜராகவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது..
இந்த நிலையில் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் சார்பில் தலைமை நீதிபதி அமர்வில் அமர்வில் முறையீடு செய்தார். சட்டசபையில் குட்கா கொண்டு வந்ததற்காக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கியது தொடர்பான வழக்கில் திமுகவின் மற்ற உறுப்பினர்களின் வாதங்களையே தன் தரப்பு வாதமாக எடுத்து கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
சொதப்பும் ஐ-பேக்... கொதிக்கும் திமுக... இதுவரை பிரசாந்த் கிஷோர் டீம் செய்தது என்ன..?
ஆனால் அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை. வழக்கு விசாரணை நடந்தபோது எங்கே சென்றீர்கள்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் கு.க.செல்வத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவான கு.க.செல்வம், கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக கூறி திமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.