GV Prakash Saindhavi : ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து வழக்கு: தீர்ப்பு தேதியை அறிவித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம்
சென்னை: ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து (GV Prakash - Saindhavi Divorce) வழக்கில் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி தம்பதி விவாரத்து செய்கிறோம் என்று கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர். திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிய நிலையில் நன்கு யோசித்து தான் இந்த முடிவை எடுத்ததாக இருவரும் கூறியிருந்தனர்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். தொடர்ந்து நடிகராகவும் அறிமுகம் ஆனார். பல ஹிட் படங்களையும் கொடுத்துள்ளார். முதலில் பாடல்கள் மூலமாக பிரபலமானார் ஜிவி பிரகாஷ். ஆடுகளம் படத்தில் அவரது இசை பலராலும் பாராட்டப்பெற்றது.

ஜிவி பிரகாஷ் - சைந்தவி
இதேபோல் 'டார்லிங்', 'திரிஷா இல்லைன்னா நயன்தாரா' ஆகிய படங்களில் ஹீரோவாகவும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்தார். இப்போதும் பல படங்களில் நடித்தும், இசையமைத்தும் வருகிறார். இந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி மனைவியும் பாடகியுமான சைந்தவியை பிரிவதாக அறிவித்தார். சைந்தவியும் ஜிவி பிரகாஷ் குமாரை பிரிவதாக அறிவித்திருந்தார்.
அக்டோபர் 30ஆம் தேதி தீர்ப்பு
ஜிவி பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி தம்பதி, "நாங்கள் விவாகரத்து செய்கிறோம். திருமணம் ஆகி 11 ஆண்டுகள் ஆகிய நிலையில் நன்கு யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்று கூறியிருந்தனர். இதையடுத்து, இவர்களது விவாகரத்துக்காக சென்னை குடும்பநல நீதிமன்றத்தை நாடினர்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி விவாகரத்து வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று சென்னை குடும்பநல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் - திருமண வாழ்க்கை
சினிமாவில் படு பிசியாக இருந்த ஜிவி பிரகாஷ் குடும்பத்தையும் கவனித்தே வந்தார். கடந்த 2013ஆம் ஆண்டு காதலியான சைந்தவியை திருமணம் செய்தார். வயலின் கலைஞரான சைந்தவியின் குடும்பத்தினர் சம்மதம் வழங்கியதால், இரு குடும்பங்களின் ஒப்புதலோடு திருமணம் நடைபெற்றது.
பள்ளிக்காலத்திலிருந்தே ஜிவி பிரகாஷ் - சைந்தவி காதலித்து வந்தனர். இதேபோல் ஜிவி பிரகாஷ் இசையில் பல பாடல்களை சைந்தவி பாடியுள்ளார். குறிப்பாக ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்த 'அசுரன்' படத்தில் இடம்பெற்ற "எள்ளுவாய்ப் பூக்கலையே", 'மயக்கம் என்ன' படத்தில் இடம்பெற்ற "பிறை தேடும் இரவிலே", "கையிலே ஆகாசம்" போன்ற பல ஹிட் பாடல்களை அவர் பாடியுள்ளார்.
பிரிவதாக அறிவிப்பு
ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி தம்பதிக்கு 2020ஆம் ஆண்டு அன்வி என்ற மகள் பிறந்தார். தொடர்ந்து மகிழ்ச்சியுடனே வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் ஒரே நேரத்தில் எக்ஸ் (முந்தைய ட்விட்டர்) வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தனர். அதில் இருவரும் குடும்ப வாழ்க்கையில் இருந்து பிரிவதாக அறிவித்திருந்தனர்.
"இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். 11 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தோம். நன்கு யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம். நீண்ட யோசனைக்குப் பிறகு தான் ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையுடன், எங்கள் மன நிம்மதிக்காக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
எங்களுக்குள் தனிப்பட்ட இந்த முடிவை ஊடக நண்பர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது தேவை எங்களது தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்," என்று பதிவிட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications