எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு!
சென்னை: தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி அளிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சென்னை வந்த பிரதமர் மோடி பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய மோடி, அப்போது எச்.ராஜாவை தனியாக அழைத்து உடல்நலம் குறித்து விசாரணை மேற்கொண்டதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. என்டிஏ கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இம்முறை காரைக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்பிய எச்.ராஜா உடல்நலம் சரியில்லாததால், கடைசி நேரத்தில் விலகுவதாக கட்சியினரிடம் கூறிவிட்டார்.

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற எச்.ராஜா திடீரென மயங்கி விழுந்தார். இதன்பின் எச்.ராஜாவின் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை, கட்சிகள் கடந்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு தரப்பினரும் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதனையடுத்து எச்.ராஜாவும் அரசியல் நடவடிக்கைகளை குறைத்து கொண்டார். இந்த நிலையில் புதுச்சேரியில் பிரச்சாரத்தை நிறைவு செய்துவிட்டு பிரதமர் மோடி சென்னை வந்தார். அப்போது பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதேபோல் எச்.ராஜாவை நேரில் வரழைத்திருக்கிறார். மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதிக்கும் அப்பாய்ண்ட்மெண்ட் அளிக்கப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சி தொகுதியில் தனக்கு பதிலாக தனது மருமகளுக்கு சீட் கொடுத்ததற்காக பிரதமர் மோடிக்கு சரஸ்வதி நன்றி தெரிவித்துள்ளார். ஆனால் எச்.ராஜாவை தனியாக அழைத்து பேசிய மோடி, அவரின் உடல்நலம் குறித்து அக்கறையுடன் விசாரித்திருக்கிறார். அப்போது எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி அளிக்க உள்ள செய்தியையும் மோடி கூறி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்கு பின் இந்த செய்தி வெளியாகும் என்று மோடி உறுதி கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் எச்.ராஜா உற்சாகத்துடன் வந்திருக்கிறார். ஏற்கனவே எச்.ராஜாவுடன் கட்சி பணியாற்றிய இல.கணேசன், தமிழிசை செளந்தரராஜன், சிபி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆளுநர்களாக பணியாற்றிவிட்டனர். தற்போது எச்.ராஜாவுக்கு வாய்ப்பு அளிக்க பாஜக மேலிடம் முடிவு எடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications