அண்ணாவை விமர்சித்த பத்ரியின் சமூகம் குறித்து அதெப்படி பேசலாம்? சுப.வீ மீது எச்.ராஜா பாய்ச்சல்
சென்னை: பேரறிஞர் அண்ணாவை இழிவாக விமர்சித்த பதிப்பகம் நடத்தும் பத்ரி சேஷாத்ரிக்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கண்டனம் தெரிவிப்பதை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவை இடியட் என விமர்சித்தார் பத்ரி. இதனால் பத்ரிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன.
மேலும் பத்ரி நடத்தி வரும் கிழக்கு பதிப்பகத்தின் நூல்களை புறக்கணிப்பதாக விற்பனையாளர்கள் பதிவிட்டனர். புத்தக விற்பனை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டன.
பத்ரிக்கு எதிரான குரல்
இதனையடுத்து தமிழக அரசின் தமிழ் இணைய கல்வி குழுவில் இருந்து பத்ரியை நீக்கவேண்டும் என்ற குரல்களும் வலுத்தன. இதனை ஏற்று தமிழக அரசும் தமிழ் இணைய கல்வி குழுவில் இருந்து பத்ரி சேஷாத்ரியை நீக்கி வெளியேற்றியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டும் வருகிறது.
சுப.வீ. ஆவேசம்
இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்திருந்த திராவிட இயக்க தமிழர் பேரவையின் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், அறிஞர் அண்ணாவை idiot என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பத்ரி சேஷாத்திரியின் பார்ப்பனத் திமிரைக் காலம் அடக்கும்! என சீறியிருந்தார். அதேபோல் திமுக எம்.பி. திருச்சி சிவாவும் பத்ரியை வன்மையாகக் கண்டித்திருந்தார்.
திமுக எம்.பி. செந்தில்குமார்
திமுக எம்.பி. செந்தில்குமார் தமது ட்விட்டர் பக்கத்தில், அறிவாற்றல் பேரறிஞர் அண்ணாவை பத்ரி அவமானப்படுத்தி பேசியது கண்டனத்துக்குரியது, இத்தகைய ஆட்களுக்கு குழுக்களில் இடம் அளிப்பது அண்ணா மேல் மரியாதை வைத்திருக்கும் கழக சுயமரியாதை தொண்டர்களுக்கு வேதனை அளிக்கிறது என கூறியிருந்தார். அத்துடன் தமிழ் இணைய கல்வி குழுவில் இருந்து பத்ரி நீக்கப்பட்டதையும் செந்தில்குமார் பகிர்ந்திருந்தார்.
எச்.ராஜா ஆவேசம்
இதில் பேராசிரியர் சுப.வீயின் கருத்தை பகிர்ந்து தமது ட்விட்டர் பக்கத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பதிவிட்டுள்ளதாவது: பத்ரி சேஷாத்ரியின் கருத்துக்கு பதில் இருந்தால், தெரிந்தால் கூற வேண்டும். காந்திஜியை காமாந்தகாரகன் என்று சொன்னவர்களின் திமிர் தொடர்வதை காலம் அனுமதிக்காது. ஒரு தனிநபரின் கருத்திற்கு அவரது சமுதாயத்தைப் பற்றிய உங்களது கருத்து திராவிடியன் ஸ்டாக் என்றால் அநாகரீகம் என நிரூபிக்கிறது என கொந்தளித்துள்ளார் எச்.ராஜா.