தடதடத்த வாதங்கள்.. அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை.. செந்தில்பாலாஜி மனு விசாரணையை ஒத்தி வைத்தது ஐகோர்ட்!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதங்களை அடுக்கினார். இதையடுத்து அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவரது இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் 4 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி மனைவியின் கோரிக்கையை அடுத்து, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு நேற்று இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள், "சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து, அதன் பிறகு தானே விசாரணை நடத்தியுள்ளது. ஒருவேளை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை தவறாகக் கையாண்டிருந்தால், அதை அரசியல் சாசன விதிப்படி உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும். ஆனால், உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதுகிறோம்" என்றனர்.
மேலும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையைத் தள்ளிவைக்கக் கூடாது. மெரிட் அடிப்படையில் அந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறி, அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்து, விசாரணையை வரும் ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தனது கணவரை அமலாக்கப் பிரிவினர் சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாகவும், அவரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனவும், கைது குறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, ஆட்கொணர்வு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது. மேலும் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், ஆட்கொணர்வு மனு இன்று மீண்டும் நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்துள்ளது. செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைத்த பின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது தான் என ஐகோர்ட்டே தெரிவித்துள்ளது என செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதம் வைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு, விசாரணைக்கு உகந்ததுதான் என்பதற்கு ஆதரவாக உள்ள உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிகாட்டி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதங்களை வைத்து வருகிறார்.
அமைச்சரின் கைது சட்டவிரோதம் இல்லை என்றால் ஆட்கொணர்வு வழக்கு தேவையில்லை. ஆனால், இதில் சட்டவிரோத நடவடிக்கை உள்ளது என வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதங்களை வைத்துள்ளார்.
ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல, எனவே அமலாக்கத்துறை தரப்பில் தான் முதலில் வாதம் முன்வைக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வழக்கறிஞர், "செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்தோம். நீதிமன்ற காவலில் வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. காவேரி மருத்துவமனைக்கு மாற்றிய உத்தரவை இடைக்கால உத்தரவாக கருத முடியாது. மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜியை பார்வையிட்ட நீதிபதி நீதிமன்ற காவலில் வைக்க இயந்திரத்தனமாக உத்தரவிட்டார்.
13ஆம் தேதி இரவு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. குற்ற விசாரணை முறைச் சட்டம் 41ஏ பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த பிரிவு தங்களுக்குப் பொருந்தாது என அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்படுகிறது. குற்றவியல் நடைமுறை சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கு எந்த காரணங்களும் அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை." என வாதிட்டார்.
பரபரத்த வாதங்கள்: கைதுக்கான காரணங்களை தெரிவிக்காமல் யாரையும் கைது செய்யக்கூடாது என்பதற்காகவே அரசியல் சாசன சட்டத்தின் 15ஏ பிரிவை அம்பேத்கர் சேர்ந்திருக்கிறார். செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணத்தை தெரிவித்திருக்க வேண்டும் எது அடிப்படை உரிமை.செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பியதே தவறு.
2014-2015 காலகட்டத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு திமுகவில் சேர்ந்ததால் பழிவாங்கப்படுகிறார் செந்தில் பாலாஜி, திமுக அரசின் அமைச்சரான பிறகே செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை 2021ல் வழக்குப் பதிவு செய்தது, செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கையில் உள்நோக்கம் உள்ளது என என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பு வாதம்: செந்தில் பாலாஜி தரப்பு, அவர் மீது உள்நோக்கத்துடன் ஆட்கொணர்வு மனுவுக்கு மீறிய வாதங்களை முன்வைக்க முடியாது. வழக்கை ரத்து செய்யக்கோரும் மனு மீது வேண்டுமானால் உள்நோக்கம் என்ற காரணத்தை குறிப்பிடலாம் என வாதம் வைக்கப்பட்டது.
அப்போது அமலாக்கத்துறையின் வாதத்தை ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆட்சேபம் கவனத்தில் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
ஒத்திவைப்பு: செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பதில் வாதத்திற்கு அவகாசம் கோரிய அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று, செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனுவின் அடுத்தகட்ட விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications