லாரியில் அடிபடனும் என்று திட்டிய சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஜய்.. சகோதரர் என நெகிழ்ச்சி
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் சீமானை சகோதரர் என்று அன்போடு அவர் அழைத்துள்ளார். சமீபத்தில் விஜயை, சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் இந்த வாழ்த்து என்பது தமிழக அரசியலில் கவனம் ஈர்த்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். சீமானுக்கு இன்று பிறந்தநாள். சீமானின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஜயை, சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் இந்த வாழ்த்து என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர், தமிழர் என இரு கொள்கையை எடுத்துக்கொள்வது நடு ரோட்டில் நிற்பதை போல. லாரியில்தான் அடிபட வேண்டி வரும் என்று சீமான் விஜயை பார்த்து கேலி செய்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இதுதொடர்பாக TVK Vijay எனும் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், ‛‛நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்’’ என கூறியுள்ளார்.
தற்போது தமிழக அரசியலில் ‛டாக் ஆப் தி டவுன்’ ஆக நடிகர் விஜய் உள்ளார். இதற்கு கடந்த மாதம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அவர் நடத்தி முடித்த முதல் அரசியல் மாநாடு தான் காரணம். அந்த மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் குவிந்தனர். மாநாட்டில் விஜய் தனது கொடியின் விளக்கம், கொள்கைகளை தெளிவுப்படுத்தினார்.
பிளவுவாத அரசியல் செய்யும் பாஜக கொள்கை எதிரி எனவும், ஊழல் கபடதாரிகளான திமுக தனது அரசியல் எதிரி என்றும் மேடையில் அறிவித்தார். அதேபோல் பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்கவில்லை. அதேபோல் திராவிடமும், தமிழ் தேசியமும் இருகண்கள் என்று பேசினார். அதுமட்டுமின்ற கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்றும் தெரிவித்தார்.

விஜயின் இந்த அனல் தெறித்த பேச்சு தான் தற்போது தமிழக அரசியலில் பேசும்பொருளாகி உள்ளது. விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தான் தமிழ் தேசியமும், திராவிடமும் இருகண்கள் என்று கூறிய விஜயை சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார். குறிப்பாக கடந்த 1ம் தேதி சென்னை சோழிங்கநல்லூரில் தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது விஜயை தம்பி எனக்கூறி மறைமுகமாக கடுமையாக தாக்கி பேசியிருந்தார். அப்போது சீமான், ‛‛ ‛‛தம்பி, நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் இல்லை. வரலாற்றை கற்பிக்க வந்தவன். நீங்கள் இனிமேல் தான் பெரியார், அம்பேத்கர் எல்லோரையும் படிக்க வேண்டும். ஆனால் நாங்கள் அவர்களை படித்து பிஎச்டி வாங்கி உள்ளோம்.
திராவிடமும், தமிழ் தேசியமும் எப்படி ஒன்றாக முடியும். இது கொள்கை இல்லை. கூமுட்டை.. அதுவும் அழுகின கூமுட்டை. வாட் ப்ரோ.. இட்ஸ் வெரி ராங் ப்ரோ.. ஒன்று சாலையில் அந்த ஓரத்தில் நில்லு. இல்லைனா சாலையில் இந்த ஓரத்தில் நில்லு. நடுவில் நின்றால் சாலையில் லாரி அடிச்சி செத்துப்போவ பார்த்துக்கோ. தன் இன பாலகன். தன் மார்பிலேயே பால் குடித்தவர். தன் மடியிலேயே தவழ்ந்தவன் இறந்து விட்டானே என்று அழுது துடிப்பது தமிழ் தேசியம்’’ என்று கடுமயைாக விமர்சனம் செய்தார்.
இதற்கு பதிலடியாக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள் சீமான் மற்றும் நாம் தமிழர் கட்சியை விமர்சித்து வருகின்றனர். தற்போது வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் நடிகர் விஜய் இன்று சீமானை சகோதரர் எனக்கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications