“சிங்கப்பூர் போல இருக்கு சென்னை”- ஹேப்பி ஸ்ட்ரீட் விழாவில் கரைபுரண்ட மகிழ்ச்சி வெள்ளம்
சென்னை: பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாத நகரம் சென்னை. காலை எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்வது வரை எல்லாம் எங்கே அலாரம் அடித்த மாதிரியே நடக்கும்.
ஆனால், இப்போது எந்திர மயமான வாழ்க்கைத் தரத்திலிருந்து மெல்ல வெளியேறி வருகிறது நம்ம சென்னை. காரணம், 'மகிழ்ச்சி வீதி விழா'. என்ன புரியவில்லையா? ஆமாங்க.. 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற புதிய கலாச்சாரம் சென்னையில் கரைபுரண்டு ஓட ஆரம்பித்திருக்கிறது.

சென்னை என்பது பரபரப்பாகப் பணம் சம்பாதிக்க மட்டுமல்ல; கொஞ்சம் சந்தோஷமாக வாழ்வைக் கழிக்கவும்தான் என உணர ஆரம்பித்துள்ளது இன்றைய இளம் தலைமுறை.
இந்த விழா சில வாரங்கள் முன்பாக பாண்டி பஜாரில் நடைபெற்றது. வாகனங்களை மட்டுமே பார்த்துப் பழகிய பழைய பாண்டி பஜார் முதன்முறையாக மக்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்தது. அதற்கு அடுத்து அண்ணா நகரில் நடந்தது.

தியாகராய நகரில் 4 ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்ற விழாவில், அங்கே ஒரு மனிதர் அச்சு அசலாகச் சிலை போலவே உறைந்து போய் மணிக்கணக்காக நின்று பலரை வியக்க வைத்தார்.
வெறுமனே சினிமா பாடல்கள் மட்டும் இல்லாமல் நம் பாரம்பரிய நடனம், பாட்டும் பங்கேற்ற பலர் பாடி உற்சாகம் பெற்றனர். அதேபோல் பலர் தங்களின் செல்லப் பிராணிகளுடன் வந்து பலரது கவனத்தை தங்களின் பக்கம் ஈர்த்தனர்.

இந்தப் புதிய திருவிழாவைப் பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறை, ஜிசிசி மற்றும் பெருநகர சென்னை காவல்துறை ஆகியவற்றுடன் சில தனியார் நிறுவனங்களும் சேர்ந்து நடத்தி வருகின்றன. இந்த விழாவின் அமைப்பு ஆட்டம் பாட்டம் என வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதன் அர்த்தம் உண்மையிலேயே வேறு.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் சென்னையின் முகமே மாறிவிட்டது. மேயர் பிரியா பல விதங்களில் சென்னையின் அடையாளத்தை மேலும் அழகுபடுத்தி வருகிறார்.

கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமை பெரம்பூர் 70 அடி சாலை, அதாவது சிவா இளங்கோவன் சாலையில் நடைபெற்றது. காலை 6 மணி தொடங்கி, பகல் 9 மணி வரை நடைபெற்றது. பெரம்பூர் சாலை முழுவதும் விளையாட்டு மைதானம் போல் காட்சி அளித்தது. குழந்தைகள் தங்களின் குட்டி சைக்கிளை மிதித்தபடி அதிகாலையை அழகாக மாற்றினர்.

அதேபோல் இளைஞர்கள் மற்றும் இளைஞர்கள் வெறித் தனமாக நடனமாடிக் கொண்டாடினர். சிறுமிகள் தங்களின் கைகளில் குட்டிக் குட்டி படங்களை ஓவியமாக வரைந்து கொண்டனர்.

இது குறித்து 45 வயது மதிக்கத்தக்க அந்தப் பகுதிவாசி, "சென்னை இன்று வேறு உயரத்திற்குச் செல்லத் தொடங்கியுள்ளது. இந்த விழாவைப் பார்க்கும் போது சிங்கப்பூர், மலேசியா, லண்டன் போல உள்ளன. இந்தத் தலைமுறையினர் கொடுத்து வைத்தவர்கள். நானும் கொஞ்சம் ஆடினேன். முடியவில்லை. மூச்சு இரைக்கின்றது" என்கிறார்
இதற்காகவே டிஜேகள் வரவழைக்கப்பட்டனர். அவர்களும் உற்சாகமாகப் பாட்டுப் பாடி கலக்கினர். குறிப்பாக, 'பாலே இங்கு தேரல.. பாயாசம் கேட்குதா? காத்தே இங்கு வீசல.. காத்தாடி கேட்குதா?' என்ற தனுஷ் பாடலை தாறுமாறாகப் பாடி உற்சாக உறுமியை வாசித்தது.

"முதன்முறையாக வடசென்னை பகுதியான பெரம்பூரில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' விழாவை நடத்தி இருக்கிறார்கள். இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்ப்பாக்கவே இல்லை. டிஜே இசை நிகழ்வினால் இந்தப் பகுதியே கலகலப்பாகிவிட்டது.
பொழுதுபோக்கு விஷயங்களுடன் எப்படி சாலை பாதுகாப்பு என்ற விஷயத்திற்காக விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமோ அதை நம் தமிழ்நாடு காவல்துறையினர் செய்திருக்கிறார்கள். இன்னும் 4 வாரங்கள் வரை இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதற்காகவும் பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்கிறார் ஒரு இளம் பெண்

"பொதுவாக டிஜே இசை என்றால் இரவில்தான் நடைபெறும். ஆனால், முதன்முறையாகப் பகலில் இதைச் செய்திருக்கிறார்கள். உலக அளவில் இப்படி பகலில் நடைபெற்று இருக்குமா என்பது சந்தேகமானதுதான். ஆகவே கூடுதலா ஒரு உற்சாகம் கிடைத்தது. காவல்துறை எந்த நோக்கத்திற்காக இதைச் செய்கிறதோ, அதைப் பொதுமக்களாகிய நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்" என்றார்
"செம ஜாலியாக இருந்தது. நல்ல வைப் ஆ இருந்தது. தலைக்கவசம் போட்டு பயணம் செய்ய வேண்டும். பாதுகாப்பாக இருக்க வேண்டும். சாலை விதிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும் எனப் பல விழிப்புணர்வு விதைகளை இந்த நிகழ்ச்சி மூலம் எங்கள் மனதில் வித்திருக்கிறார்கள்.
ஆடிக் கொண்டே அத்தனை விஷயங்களையும் கேட்டோம். ஜிம் போக வேண்டிய தேவையே இல்லை. அந்தளவுக்கு டான்ஸ் ஆடினது உற்சாகமாக இருக்கிறது" என்றார்கள் சேர்ந்தே வந்திருந்த இரண்டு பெண்கள்.
இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி அன்று அந்த பகுதியின் பக்கம் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். அனைவரும் அந்த வீதிக்குள் நடந்தேதான் பயணம் செய்ய வேண்டும்.
அங்குள்ள தெருவில், கேரம், டேபிள் டென்னிஸ், ஸ்காடிங், கிரிகெட், கோக்கோ, கபடி, பல்லாங்குழி என தங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை ஆடலாம். அத்துடன் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் உண்டு. இதில் பங்கேற்றுப் பாடலாம், அப்படியே ஆடலாம். அந்த ஒரு நாள் முழுவதும் அமர்க்களம் செய்தோம், மனச் சுமைகளைக் குறைப்பதுமே இதன் நோக்கம்.
கடந்த ஆண்டு முதல் இதைப்போன்ற நிகழ்ச்சியை நாங்கள் ஒருங்கிணைத்து வருகிறோம். குறிப்பாக இதன் நோக்கம் சாலைப் பாதுகாப்புதான். குடித்துவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. சீட் பெல்ட் அணிய வேண்டும். தலைக்கவசம் கட்டாயம் போட வேண்டும் இப்படி நவீன விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இது சென்னை முழுவதும் நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு சென்னையில் மட்டும் ஆயிரம் நபர்களுக்கு மேல் சாலை விபத்தில் இறந்துள்ளார்கள். அதைக் குறைக்க வேண்டும்.
ஆகவே இந்த ஆட்டம் பாட்டம் நிகழ்வின் இறுதியில் சாலை விதிகளைக் கடைப்பிடிப்பேன் என்று பங்கேற்ற அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். அதை உணர்ந்து வருங்காலத்தில் விதிகளை மீற மாட்டார்கள் என நம்புகிறோம் " என்கிறார் ஒரு காவல் அதிகாரி












Click it and Unblock the Notifications