அதிர்ஷ்டம் விஜய பிரபாகரனுக்கு? அப்ப தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா வேற 3ம் தேதி ரெடியாயிட்டாங்க
சென்னை: "திமுக, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக தலைவர் விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.. எனவே, அதே நேரம், விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என அவர்களது தரப்பில் அதிகாரபூர்வமாக கூறிவிட்டதால், இனி அதிமுகவும் தவெக கூட்டணிக்கு வர ஆர்வம் காட்ட வாய்ப்பில்லை.. அந்தவகையில், நாம் தமிழர், பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியிலுள்ள கட்சிகளை விஜய் இழுக்க பார்க்கிறாரோ? என்ற சந்தேகமும் வலுக்கவே செய்தது. இந்நிலையில்,தேமுதிக தன்னுடைய தேர்தல் பணியை துவங்கியிருக்கிறது. இதுகுறித்து விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம் விரிவாக பேசியிருக்கிறார்.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக ஏற்கனவே மாநிலங்களவை எம்பி பதவியை அதிமுக தங்களுக்கு கொடுக்கவிருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் கூறிவந்தார்.. ஒருவேளை எடப்பாடி பழனிசாமி தேமுதிகவை தேர்ந்தெடுத்தால், விஜயபிரபாகரன் எம்பியாக வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவுமே நடக்காமல் போய்விட்டது.

இப்போது சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.. மறுபுறம் கூட்டணியையும் வலுப்படுத்தி வருகிறார்.
பாஜக - அதிமுக கூட்டணி
இப்போதைக்கு அதிமுக கூட்டணியில் பாஜக மட்டுமே இணைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியால் அழைப்பு விடுக்கப்பட்ட எந்தக்கட்சியும் இதுவரை கூட்டணிக்கு உறுதியாக வந்து சேரவில்லை.. எனவே, ஏற்கனவே இருக்கும் தோழமைக் கட்சிகளை, கூட்டணிக்குள் கொண்டு வந்து, வலுப்படுத்த முயன்றுள்ளதாக தெரிகிறது.
தேமுதிக பற்றி எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "தேமுதிக எங்களுடன் பயணித்து வந்தவர்கள். அவர்கள் எங்களுடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று நம்புகிறேன். அவர்களுக்கு தருவதாக இருந்த ராஜ்ய சபா சீட் 2026ல் அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.. அதிமுகவில் எத்தனை கட்சிகள் வந்தாலும் தொகுதிப் பங்கீடு எளிதாக முடிந்துவிடும். ஆனால் திமுகவில் அப்படி நடக்காது" என்று கூறியிருக்கிறார்.
மீண்டும் ராஜ்ய சபா சீட் பற்றின உறுதி அதிமுக பக்கமிருந்து வந்துள்ளது, தேமுதிகவுக்கு நம்பிக்கையையே தந்து வருவதாக தெரிகிறது.
தேமுதிக கூட்டணி யாருடன்
இந்நிலையில், கோவையில் நடந்த விழாவில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது விஜய பிரபாகரன் சொன்னதாவது:
"உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற தலைப்பில், தேமுதிக சார்பில் ஆகஸ்டு 3ந்தேதி முதல் 28ம் தேதிவரை தேர்தல் பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் துவக்குகிறோம்.. 3-ந்தேதி கும்மிடிப்பூண்டியில் எங்களது பிரச்சாரம் தொடங்குகிறது. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து பேச உள்ளார்.
கடலூரில் மாநாடு
கட்சியை வலுப்படுத்துவதற்கும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும்.
ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் நாங்கள் யாருடன் கூட்டணி என கூறுவோம் என ஏற்கனவே பொதுச்செயலாளர் தெரிவித்திருப்பதால், அன்றைய தினம் நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பது தெரியும்.
வருகிற 5 மாதங்களும் கட்சி பணிகளையும், மக்கள் பிரச்சனைகளையும், கட்சியை வலுப்படுததுவதற்கான பணிகளை மேற்கொள்வதும் தான் எங்களுடைய எண்ணம். அதனை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு
கமல்ஹாசன் எம்.பி. ஆனதை நாங்கள் வரவேற்கிறோம். நீண்ட நாட்கள் சினிமா துறையில் சாதித்து விட்டு தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவருக்கு தி.மு.க. சார்பில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.. எனவே, மக்கள் பிரச்சனையை கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கொண்டு பிரதமர் மோடியை தேமுதிக சார்பில் யாரும் சந்திக்கவில்லையே என்று கேட்கிறார்கள்.. முதலில் நாங்கள் இருக்கிறோமா?
நாங்கள் கூட்டணியில் இருக்கும்போது பிரதமர் எங்களை வந்து பார்க்கலாம் அல்லவா? பிரதமரை மரியாதை நிமித்தமாக தேவையான சமயங்களில் சந்திப்போம். எங்களுக்கு எப்போது தேவையோ அப்போது சந்திப்போம். பிரதமர் மோடி தற்போது பிரதமராக வந்து மக்கள் பணி செய்துள்ளார். ஜனவரி மாதம் கூட்டணி முடிவானவுடன் மற்றவற்றை சொல்வோம்.
அப்பா வழியில் மகன்கள்
குடும்ப நிகழ்ச்சிக்கு செல்கிறாயோ இல்லையோ, ஆனால் கட்சிக்காரர்கள் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று என்னுடைய அப்பா எப்போதுமே சொல்லுவார். அப்பாவின் வார்த்தைப்படி நாங்கள் பயணப்பட்டு வருகிறோம். தேதி தந்து விட்டால் கண்டிப்பாக வந்து விட வேண்டும்.. துளசி வாசம் மாறும். ஆனா தவசி வாக்கு மாறாது..
நீங்கள் விஜயபிரபாகரன் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அப்பா நம்மை விட்டு எங்கும் செல்லவில்லை. நம்முடனே தான் இருக்கிறார். அவர் வீட்டு சென்ற வேலைகளை மகன்களாகிய நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications