பீச்சில் இருந்து வந்தவருக்கு “ஷாக்”.. சென்னை போலீஸ் செய்த செயல்! உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் மக்களின் தனிப்பட்ட உரிமையை பறிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை செய்யக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் உள்துறை செயலாளர் மற்றும் சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு, தமிழ்நாடு உள்துறைச் செயலாளர் மற்றும் சென்னை காவல் ஆணையர் ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் காண வேண்டும் என்பதற்காக, முக அடையாள தொழில்நுட்பம், கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் சென்னை அடையாறைச் சேர்ந்த அகிலேஷ்குமார் கந்தசாமி என்பவர் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் இந்த முக அடையாள தொழில் நுட்பத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்று திரும்பிய தன்னையும், தனது சகோதரரையும் தடுத்து நிறுத்திய போலீசார் தங்களின் அனுமதியைக் கேட்காமல் புகைப்படம் எடுத்ததாகவும், அந்த புகைப்படங்களை மாநில டேட்டா மையத்தில் பதிவேற்றம் செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
இது தனது தனிப்பட்ட உரிமையில் தலையிடும் வகையில் உள்ளதாகவும், எந்த சட்டமும் நிறைவேற்றப்படாமல் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதால், முக அடையாள தொழில்நுட்பத்தை சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல், சட்ட அங்கீகாரம் இல்லாமல் முக அடையாள தொழில்நுட்பம் பின்பற்றப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.












Click it and Unblock the Notifications