மன்னிப்பு கேட்கும் பொதுக்கூட்டம்..ஸ்டாலின்,உதயநிதி மீது அவதூறு! அதிமுக மாஜிக்கு ஐகோர்ட் புது தண்டனை
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு இதற்காக ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தி தான் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்து உள்ளது.
கள்ளக்குறிச்சி மந்தைவெளி என்ற இடத்தில் கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி அதிமுக சார்பில் அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினையும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் காவல் நிலையத்தில் குமரகுரு மீது புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி போலீசார் குமரகுரு மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் இருந்தவர் குமரகுரு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த முன் ஜாமீன் மனுவில், "கடந்த 19 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மந்தைவெளி என்ற இடத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினையும், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையும் ஆபாசமாக பேசியதாக, காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தது.
கள்ளக்குறிச்சி திமுக தெற்கு பகுதி செயலாளர் வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவின் கீழ் கள்ளக்குறிச்சி போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். இது அரசியல் உள் நோக்கத்தோடு, தொடரப்பட்ட வழக்கு. எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்." என்று அதில் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் அவருக்கு முன் ஜாமீன் வழங்ககூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, காவல்துறையிடம் முறையான அனுமதி வாங்கி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி அதில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications