கோவில் சொத்துக்களை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன - அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு
கச்சாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள கச்சாலீஸ்வரர் ஆலயத்திற்குச் சொந்தமான சொத்துக்களை மீட்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் சென்னையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கச்சாலீஸ்வரர் ஆலயத்துக்கு சொந்தமான தெப்ப குளத்தில் நடத்தப்படும் விழாவில் அருள்மிகு கச்சாலீஸ்வரர், அருள்மிகு காளியம்மன், அருள்மிகு முத்துகுமாரசுவாமி, அருள்மிகு சிவ சண்முக விநாயகர், அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய தெய்வங்கள் பங்கேற்கின்றன. 5 நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறும்.
ஆலயத்தை சரியாக பராமரிக்காததால், குளத்தின் தண்ணீர் வரத்து தடைபட்டு கடந்த 9 ஆண்டுகளாக தெப்பத்திருவிழா நடத்தப்படாமல் உள்ளது. குளத்தை சுற்றியுள்ள சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுவதால், அருகில் வசிக்கும் பொதுமக்களின் உயிருக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இதுகுறித்து, தமிழக ஆளுநர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், ஆலயத்தை பராமரிக்கவும், கோவிலை சுற்றியுள்ள கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை கண்டறிய ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அதை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்க தொடர்பாக இரண்டு வார காலத்திற்குள் தமிழக அரசு நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.