முதல்ல எல்லாத்தையும் தூக்குங்க.. நடிகை குறித்த அவதூறு தகவல்களை நீக்க கோர்ட் உத்தரவு
சென்னை: மோசடி வழக்கில் சிக்கிய நடிகை பற்றிய அவதூறு தகவல்களை இணைய தளத்தில் இருந்து நீக்குவது குறித்து ஆறு வாரங்களில் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி.,க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆடி போனா ஆவணி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள சுருதி, திருமண வரன் தேடும் இணையதளம் மூலம் ஜெர்மனியில் ஆட்டோமொபைல் நிறுவனத்தின் பணியாற்றும் ஒருவருடன் தொடர்புகொண்டு, அவரிடம் ரூ.41 லட்சம் ஏமாற்றியதாக கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் சுருதி, அவரது தாயார் சித்ரா, வளர்ப்புத் தந்தை வெங்கடேஷ், சகோதரர் சுபாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்கள்.
ஜாமீனில் விடுதலையாகியுள்ள நடிகை சுருதி, இணையதளங்களில் தன்னை பற்றி புகைப்படங்களுடன் கூடிய அவதூறான செய்தி வெளியாகி உள்ளதாகவும், அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கும்படி கோவை சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நடிகை சுருதியின் கோரிக்கை மனுவை 6 வாரங்களுக்குள் பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி.,க்கு உத்தரவிட்டார்.