தோட்டக்காரர், துப்புரவாளர் உள்ளிட்ட பணிகள்.. வெளியாட்களுக்கு ஒப்பந்தம்.. அரசுக்கு உரிமை இல்லை!
சென்னை: அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில் தோட்டக்காரர், துப்புரவாளர் உள்ளிட்ட பணிகளை வெளியாட்களுக்கு ஒப்பந்தம் வழங்கும்படி உத்தரவிட அரசுக்கு உரிமையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரியில், ஆசிரியர் அல்லாத 44 பணியிடங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதில், தோட்டக்காரர், காவலர், துப்புரவாளர் உள்ளிட்ட நான்கு பணியிடங்கள் காலியானது.

இப்பணியிடங்களுக்கு ஆட்களை நியமித்த கல்லூரி நிர்வாகம், அந்த நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கும்படி, கல்லூரி கல்வி இயக்குனருக்கு விண்ணப்பித்தது. ஆனால், இப்பணிகளை, வெளியாட்களுக்கு ஒப்பந்தம் வழங்கும்படி உத்தரவு பிறப்பித்த அரசு, கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து தமிழக உயர் கல்வித் துறை செயலாளர், கல்லூரி கல்வி இயக்குனர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆஷா அடங்கிய அமர்வு, அரசால் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களுக்கான பணிகளை வெளியாட்களுக்கு ஒப்பந்தம் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உரிமையில்லை எனக் கூறி, தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications