தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு தடையில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: வணிக ரீதியாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்த தமிழக அரசு விதிமுறை வகுக்கும் வரை ரேபிடோ பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்படலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கால் டாக்ஸி சேவையைப் போல் பைக் டாக்ஸி சேவையை ரேபிடோ என்ற நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்தது. இதற்காக கூகுள் பிளே ஸ்டோரில் ஆப்பை ஒன்றை உருவாக்கிய அந்நிறுவனம், இரு சக்கர வாகனங்களை யார் வேண்டுமானாலும் வாடகைக்கு விடலாம் என அறிவித்தது.

இதற்கு கால் டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஸா ஓட்டுனர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் மோட்டார் வாகன சட்டப்படி தனிநபரின் வாகனங்களை வணிக ரீதியாக பயன்படுத்தினால் குற்றம் ஆகும்.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவின்படி பைக் டாக்ஸி சேவையை செயல்படுத்த சென்னை காவல்துறை தடைவிதித்தது. மேலும் ரேபிடோ செயலியை கூகுள் மற்றும் ஆப்பிள் PLAY STORE-களில் இருந்து நீக்க, சென்னை மாநகர காவல்துறை பரிந்துரை செய்தது.
இதை எதிர்த்து ரேபிடோ நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கார்த்திகேயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ரேபிடோ நிறுவன வழக்கறிஞர் வாதிடுகையில், தங்கள் நிறுவன இருசக்கர வாகன ஓட்டுநர்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வருகிறார்கள். இருசக்கர வாகனத்தை வணிக ரீதியில் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில் எந்த விதிமுறையும் இல்லை. எனவே பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கூகுள் மற்றும் ஆப்பிள் பிளே ஸ்டோர்களில் இருந்து ரேபிடோ செயலியை நீக்க பரிந்துரைத்த சென்னை மாநகர காவல்துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேலும் பைக் டாக்ஸி தொடர்பாக தமிழக அரசு விதிமுறைகள் வகுக்கும் வரை, ரேபிடோ பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்தனர். இந்த வழக்கில் சென்னை மாநகர காவல் ஆணையர் பதில் மனு தாக்கல் நீதிபதிகள் உத்தரவிடடதோடு வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications