முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்!
சென்னை: தமிழக முதல்வர் விஜய்யின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில், இன்று காலை கண்டெடுக்கப்பட்ட சூட்கேஸ் ஒன்று சென்னை மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த சூட்கேஸுக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபரின் தலையில்லாத உடல் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பூர் ரயில் நிலையத்தின் அனைத்து சிசிடிவி கேமிராக்களையும் ரயில்வே போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். எப்போதுமே பரபரப்பாக காணப்படும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடைமேடையில் அனாதையாக கிடந்த சூட்கேஸ்
எப்போதுமே பரபரப்பாகக் காணப்படும் சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் இன்று காலை ஒரு பெரிய சூட்கேஸ் நீண்ட நேரமாக அனாதையாகக் கிடந்துள்ளது.
ரயில்கள் வந்து சென்றபோதிலும், அந்த சூட்கேஸை உரிமை கொண்டாட யாரும் வராததால் சந்தேகமடைந்த பயணிகள், அதுகுறித்து அங்கிருந்த ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
போலீசாரை அதிரவைத்த காட்சி
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், முதலில் அந்த சூட்கேசில் வெடிகுண்டு ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தில் எச்சரிக்கையுடன் அந்தச் சூட்கேஸை திறந்து சோதனையிட்டனர். ஆனால், அதைத் திறந்தபோது உள்ளே இருந்த காட்சியைக் கண்டு போலீசாரே உறைந்து போய்விட்டனர்.
அந்தச் சூட்கேஸுக்குள் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஓர் ஆணின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இரத்தக் கறைகளுடன் கொடூரமான முறையில் வைக்கப்பட்டிருந்தது.
போலீசார் விசாரணை
இச்சம்பவம் குறித்த தகவல் காட்டுத்தீ போலப் பரவியதைத் தொடர்ந்து, ரயில்வே காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனடியாகப் பெரம்பூர் ரயில் நிலையத்திற்கு விரைந்து வந்து நேரில் விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு, சூட்கேஸில் இருந்த விரல் ரேகைகள் மற்றும் பிற தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
கொலை செய்யப்பட்ட நபர் யார்? அவர் எங்கு வைத்துக் கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் சடலத்தை எங்கு கொண்டு செல்ல முயன்றார்கள்? ஏன் சூட்கேஸில் வைத்து இங்கு வைத்துவிட்டுப் போனார்கள் போன்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்தச் சூட்கேஸைக் கொண்டு வந்து நடைமேடையில் போட்டுவிட்டுச் சென்ற மர்ம நபர் யார் என்பதைக் கண்டறிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் தொகுதிக்கு உட்பட்ட, எப்போதும் மக்கள் கூட்டமாக இருக்கும் ஒரு முக்கிய ரயில் நிலையத்தில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், சென்னை மக்களையும் ரயில் பயணிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications