உருளும் தலைகள்? திமுகவின் பிளாக் லிஸ்ட்! அதிமுகவின் பிளான் B.. அப்போ பலிகடா அரசியல் ஆரம்பம்?
சென்னை: "வெற்றி கிடைத்தால் அது தலைமைக்கு.. தோல்வி அடைந்தால் அது உங்களுக்கு" சேலத்தில் நடந்த அந்த ரகசியச் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி உதிர்த்த இந்த ஒற்றை வரிதான் இப்போது அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களைத் திக் பிரமையில் ஆழ்த்தியுள்ளது.. கொங்கு கோட்டையைத் தக்கவைக்க வேலுமணிக்கு எடப்பாடி போட்டிருக்கும் இந்த அதிரடி நிபந்தனை, அதிமுகவுக்குள் புதிய அதிகாரப் போரைத் தொடங்கி வைத்துள்ளது..
தமிழக அரசியல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் முடிவுகள் ஒருவித மர்மத்தை தன்னுள் வைத்துள்ளன.. குறிப்பாக, அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் கொங்கு மண்டலத்தில் இந்த முறை என்ன நடக்கப்போகிறது என்பதுதான் தற்போதைய மெயின் பிக்சர்.

தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் சில மணிகளே உள்ள நிலையில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் எஸ்.பி.வேலுமணிக்கும் இடையே நடந்த சந்திப்பு, அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களைத் திக் திக் பிரமையில் ஆழ்த்தியுள்ளதாம்.
எடப்பாடியின் அதிரடி பொறுப்பு கணக்கு
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தாலும், கொங்கு மற்றும் வடக்கு மண்டலங்கள்தான் எடப்பாடியின் கௌரவத்தைக் காப்பாற்றின.. அன்று அந்த மண்டலங்கள் இவரின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தன.. ஆனால், தென் மாவட்டங்களிலும் டெல்டாவிலும் ஓ.பன்னீர்செல்வம் கோட்டை விட்டதுதான் எடப்பாடியின் இமேஜை டேமேஜ் செய்தது.. அந்த ஆதங்கத்தைத்தான் இப்போதும் அவர் கையிலெடுத்துள்ளார்..
இந்த முறை நிலைமை வேறு.. கொங்கு மண்டல தேர்தல் பணிகளை எஸ்.பி.வேலுமணியிடம் முழுமையாக நம்பி ஒப்படைத்த எடப்பாடி, இப்போது மிகக் கறாரான ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளாராம்..
அதாவது "வெற்றி கிடைத்தால் அது தலைமைக்கு.. ஒருவேளை இங்கு சறுக்கல் ஏற்பட்டால், அதற்கு நீங்கள்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என்று எடப்பாடி போட்ட கண்டிஷன் தான் இப்போது அதிமுகவின் ஹாட் டாபிக்.. இது வேலுமணிக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம் என்பதை விட, பின்னடைவு ஏற்பட்டால் அவரை ஓரங்கட்ட போடப்பட்ட "ப்ளான் B" என்றே கட்சிக்குள் கிசுகிசுக்கிறார்கள்..
கரூரில் இருந்து வந்த செக் டீம்
மறுபுறம், கோவையில் அதிமுகவின் பலத்தை உடைக்க திமுக தலைமை மிக நுணுக்கமான காய்களை நகர்த்தியுள்ளது.. உள்ளூர் நிர்வாகிகளை மட்டுமே நம்பி களத்தை விடாமல், கரூரில் இருந்து செந்தில் பாலாஜியின் தீவிர விசுவாசிகளை ஒரு ஸ்பெஷல் ஸ்குவாட் போல கோவைக்குள் இறக்கப்பட்டதாம்..
உள்ளூர் புள்ளிகள் எங்கே கவனக்குறைவாக இருப்பார்கள் என்பதை முன்கூட்டியே மோப்பம் பிடித்த அந்த வெளியூர் படை, ஒவ்வொரு பூத்தையும் தீவிரமாகக் கண்காணித்தது..
குறிப்பாக, கோவை வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கொடுக்கப்பட்ட சில "அசைன்மென்ட்கள்" முறையாக மக்களைச் சென்றடையவில்லை என்ற தகவல் கசிந்ததும், அந்த டீம் உடனடியாக ஆடிட் வேலையில் இறங்கி உள்ளதாம்..
ஒரு பூத் கமிட்டிக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் கணிசமான அளவு நடுவிலேயே "திசைமாறி" இருப்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.. கரூரில் இருந்து வந்த குழுவினர் இப்போது லிஸ்ட்டை கையில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு வாக்காளரையும் ரகசியமாகத் தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருவதால், கையாடல் செய்த நிர்வாகிகளின் வயிற்றில் புளி கரையத் தொடங்கியுள்ளது..
பலிகடா அரசியல்?
ஆக, 2 கட்சிகளிலுமே தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிரடி நிர்வாக மாற்றங்கள் நடக்கும் என்றே தெரிகிறது.. வெற்றி கிடைத்தால் அது தலைமைக்குச் செல்லும் கிரெடிட், ஆனால் பின்னடைவு ஏற்பட்டால் அது அந்தந்த மாவட்ட மற்றும் மண்டல பொறுப்பாளர்களின் தலை உருளத்தான் காரணமாகும்.. ஒருவேளை கொங்கில் சறுக்கினால், அதை வைத்தே வேலுமணி போன்ற சீனியர்களின் செல்வாக்கை சுருக்க எடப்பாடிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்..
திமுக தரப்பிலும், தேர்தல் பணிகளில் மந்தமாக இருந்த நிர்வாகிகளின் லிஸ்ட் தயாராகி வருவதால், முடிவுகள் வந்த கையோடு பெரிய அளவிலான களையெடுப்பு நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாளை மறுநாள் ரிசல்ட் வந்துவிடும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications