மெல்ல உயரும் கொரோனா! தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் வருமா? அமைச்சர் மா.சு முக்கிய தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாவது அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்தியதால் அது விரைவாகக் கட்டுக்குள் வந்தது.
இதன் காரணமாக மாநிலத்தில் விதிக்கப்பட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மாஸ்க், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் மட்டுமே இருந்தன.

கொரோனா பாதிப்பு
இந்தச் சூழலில் தமிழகத்தில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் மாநிலத்தில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் நிலையில், இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "18 -59 வயதானவர்கள் இரு டோஸ் கொரோனா வேக்சின் போட்டு, 9 மாதங்கள் நிறைவடைந்திருந்தால் அவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி பூஸ்டா் டோஸ் போட்டுக் கொள்ளலாம். இருப்பினும், கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் பலரும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் சிஎஸ்ஆா் நிதி பங்களிப்புடன் இலவச பூஸ்டா் டோஸ் பணியை மாதவரத்தில் ரோட்டரி சங்கம் விரைவில் தொடங்கவுள்ளனர்.

எந்த மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் சில இடங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. செங்கல்பட்டில் இப்போது தினசரி 500 கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதை ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம். மேலும், மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்குத் தயார் நிலையில் 400 படுக்கைகள் உள்ளன.

கொரோனா பாசிட்டிவ் விகிதம்
மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கட்டுப்பாடு விதிக்க வேண்டிய சூழல் இன்னமும் ஏற்படவில்லை. கொரோனா பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்துக்கும் மேல் இருந்தாலோ, மருத்துவமனைகளில் 40 சதவீதத்துக்கும் மேலான படுக்கைகள் நிரம்பி இருந்தாலோ கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கட்டுப்பாடுகள் எப்போது
இப்போது தமிழ்நாட்டில் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்து இருந்தாலும் கூட மத்திய அரசின் விதிமுறைகளில் குறிப்பிடும் அளவுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரிக்கவில்லை. இங்கு வைரஸ் பாதிப்பு விகிதம் 2, 3 சதவீதத்திலேயே உள்ளது. வைரஸ் பாதிப்பு வரும் காலத்தில் அதிகரித்தால், அப்போது இருக்கும் நிலைமையைக் கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications