நெஞ்சை கரைத்த 5 வயது ஒடிசா மகன்.. காட்டில் இறந்த அப்பா, மயங்கிய அம்மா.. இரவெல்லாம் காவல் காத்த சோகம்
சென்னை: ஒடிசாவில் உள்ள காட்டுப்பகுதியையொட்டி செல்லும் சாலையில், விடிகாலை நேரத்தில் 5 வயது சிறுவன் ஒருவன், கண்ணீர் மல்க அழுதபடியே, அந்த வழியாக சென்ற வாகனங்களை நிறுத்தி உதவி கேட்டு நின்றிருந்தான். அந்த சிறுவனுக்கு சிலர் உதவ சென்றபோதுதான், மனதை உலுக்கும் இப்படியொரு சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. என்னதான் நடந்தது?
ஒடிசாவில் தியோகர் மாவட்டத்தில் உள்ளது அந்த காட்டுப்பகுதி.. அங்கிருந்த குறுகலான சாலையில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்த சிறுவன், வழிப்போக்கர்களிடமும், வாகன ஓட்டிகளிடமும் உதவி கேட்டபடி இருந்துள்ளான்..

உதவி கேட்ட 5 வயது மகன்
இந்த காட்சியை பார்த்ததுமே சில வாகன ஓட்டிகள் சந்தேகமடைந்து, சிறுவனிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். ஆனால், துக்கம் தொண்டையை அடைத்து காணப்பட்ட அந்த சிறுவனால் எதுவுமே பேச முடியவில்லை.. இதனால் அந்த சிறுவன், அவர்களை அருகில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றான்.
அங்கே சென்று பார்த்த போது, வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். சிறுவனின் அப்பா, உயிரற்ற நிலையில் தரையில் பிணமாக கிடந்தார். அருகிலேயே சிறுவனின் தாய் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதைப்பார்த்து பதறிப்போன வாகன ஓட்டிகள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தார்கள்.. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வருவதற்குள் காலை 10 மணி ஆகிவிட்டது.. இதற்கு பிறகு சிறுவனின் அம்மாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே அந்த பெண்ணும் இறந்துவிட்டார்..
நடுகாட்டில் விஷம் குடித்த பெற்றோர்
பிறகு போலீசார் இறந்த தம்பதி யார் என்று விசாரணையில் இறங்கினார்கள்.. அப்போதுதான், அவர்கள் பெயர் துஷ்மந்த் மஜ்ஹி, ரிங்கி மஜ்ஹி என்பதும் இவர்கள் ஜியானந்தபள்ளி கிராமத்தில் வசித்து வரும் தம்பதி என்பதும் தெரிய வந்தது.
சம்பவத்தன்று தம்பதி இருவரும், மகனை அழைத்து கொண்டு பைக்கில் வெளியே சென்றிருக்கிறார்கள்.. வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் அதிகரித்தபடியால், இருவருமே மனமுடைந்தனர்.. இப்படி தகராறுடன் வாழ்வதற்கு இறந்தே போகலாம் என்று இருவருமே கோபத்தில் சொல்லினார்கள்.. பிறகு அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, 3 பேரும் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து அடர்ந்த காட்டுக்குள் சென்றுள்ளனர். அங்கே சென்றதுமே தந்தை-தாய் இருவரும் விஷம் குடித்துள்ளனர். அந்த விஷத்தை சிறுவனுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இரவெல்லாம் காவல் காத்த மகன்
சில மணி நேரங்களிலேயே அப்பா உயிரிழந்தார்... அம்மா மயங்கி விழுந்து, உயிருக்கு போராடியபடியே கிடந்தார். ஆனால், சிறுவனுக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை.. உயிர் தப்பிய அந்த 5 வயது சிறுவனுக்கு அடர்ந்த காட்டுக்குள், கடும் குளிரில், இரவு முழுவதும் என்ன செய்வதென்று தெரியவில்லை..
அப்பாவின் சடலத்துக்கும், மயங்கி கிடந்த தாய்க்கும் அருகிலேயே காவல் போல இரவெல்லாம் விழித்து அழுதபடியே இருந்துள்ளான். பொழுது விடிந்ததும்தான், நடுநடுங்கியபடி காட்டை விட்டு வெளியே வந்து, சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் உதவி கேட்டு நின்றது விசாரணையில் தெரியவந்துள்ளது..
நெஞ்சை உலுக்கும் சம்பவம்
இது தொடர்பான விரிவான விசாரணை இன்னும் நடந்து வருகிறது.. போலீசார் சிறுவனை தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்துள்ளனர் என்றாலும், நெஞ்சை பதற வைக்கும் இந்த சம்பவம் ஒடிசாவையே உலுக்கி எடுத்து வருகிறது..
ஒரே இரவில் தாய்-தந்தை இருவரையும் இழந்து, இருளில் காட்டுக்குள் எந்த உதவியும் இல்லாமல் தவித்த, 5 வயது பிஞ்சு சிறுவனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்? எவ்வளவு பயந்திருப்பான்? அப்படியொரு கொடுமையான நிலைமை யாருக்குமே வரக்கூடாது என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகிறார்கள்.. பயந்து போயிருக்கும் சிறுவனுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications