தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்..பல மாவட்டங்களில் பறந்த அனல்..2 நாட்களுக்கு கனமழை இருக்காம்
சென்னை: அரபிக்கடலில் உருவான பைபர்ஜோய் புயல் கரையை கடந்த பின்னரும் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்தது. அனல் காற்றின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியும் மழை இல்லையே என்று ஏங்கி தவிக்கும் மக்களுக்காக 16 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூன் 8ஆம் தேதி தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. கேரளாவில் மழை பெய்தாலும் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. கரூரில் நேற்று இயல்பான அளவைவிட 7 டிகிரி அதிகமாக வெப்பம் பதிவானது. இன்னும் 2 நாட்களுக்கு இதேநிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் அனலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. வெயிலின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நுங்கம்பாக்கத்தில் நேற்றைய தினம் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தென் மேற்கு பருவமழை தொடங்கியதும், தென்மேற்கு திசை காற்று தமிழ்நாட்டு பகுதிகளுக்கு வீசத்தொடங்கும். அதன் பின்னர் வெயில் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், பருவமழை தொடங்கிய பிறகும் வெப்பம் குறைந்தபாடில்லை. கோவை, கன்னியாகுமரி, கொடைக்கானல், ஊட்டி, வால்பாறை, தொண்டி, பாம்பன் ஆகிய இடங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியிருந்தது.

இதனிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications