திக்கு திக்குன்னு பதறுதே.. வெப்ப அலை ரொம்ப உக்கிரமா இருக்கும்! எல் நினோ போய் லா நினா வருதாம்
சென்னை: எல் நினோ பருவநிலை மாற்றம் வலுவிழந்து லா நினா உருவாவதால் இந்தியாவில் வெப்ப நிலை அதிகரிக்கும் என்றும், இந்த ஆண்டு பருவ மழை தாமதமாகும் எனவும் டெல்டா வெதர்மேன் ஹெமச்சந்திரன் எச்சரித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “வலுவிழக்கும் எல் நினோ! உருவாகிறது லா நினா! இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய நேர்மறை அலைவு (PIOD) தற்போது சம நிலைக்கு (+0.26°©) வந்து உள்ளது. நேர்மறை IOD விலகியதன் காரணமாக அடுத்த 8 முதல் 9 மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் எல் நினோ விலகி, லா நினா அமைப்பு உருவாக கூடும். கடல் மற்றும் வளி மண்டலத்தில் ஏற்பட இருக்கும் இந்த ENSO அமைப்பின் மாற்றத்தினால் அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு இந்தியாவில் வெப்பநிலை இயல்பைவிட அதிகரித்து காணப்படும். இந்த வருடம் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.

ஏப்ரல் இறுதி / மே மாத துவக்கத்தில் புயல் சின்னங்கள் உருவாகி தென் இந்தியாவில் நல்ல மழைப் பொழிவை இரண்டு அல்லது மூன்று நாட்கள் கொடுக்கும். தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இரவு நேரத்தில் பரவலாக நல்ல வெப்பச் சலன மழையை எதிர்ப்பார்க்கலாம். எல் நினோ அமைப்பு நேரடியாக லா நினா அமைப்பாக மாறுவதால் தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை துவங்குவது தாமதம் அடையக் கூடும். பருவ மழை சீராக அமையாது. மேலும், டிசம்பர் & ஜனவரி 2025 மாதங்களில் புயல் சின்னங்கள் உருவாகி பருவ மழையை தீவிரப்படுத்தும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்சாம் புயல் காரணமாக பெரு மழை வெள்ளம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் பெரு மழை வெள்ளம் ஏற்பட்டது. இருப்பினும் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் சராசரிக்கும் குறைவான மழையே பொழிந்து இருக்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழையின் அளவு மிகவும் குறைவாகவே இருந்து இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்திலும் தமிழ்நாட்டில் போதிய மழை இல்லை. கோடைகாலத்திற்கு ஈடாக தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இரவு நேரத்தில் லேசான பனிப்பொழிவு இருந்தாலும் பகல் நேரத்தில் வெப்ப நிலையில் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் வெப்ப அலை அதிகரிக்கும் என்று வெளியாகி இருக்கும் தகவல் மக்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications