இது லிஸ்டிலேயே இல்லையே.. சசிகலா vs எடப்பாடி போட்ட பிளான்கள்.. நடப்பதோ வேறு!
சென்னை: ஒரு பக்கம் சசிகலா-எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சசிகலா தொண்டர்ளை சந்திக்க தயாராகி வருகிறார். இதனிடையே அமமுக கூடாரத்தை காலி செய்யும்படி எடப்பாடி பழனிசாமி அசைன்மெண்ட் கொடுள்ளதாக தகவல்கள் உலா வருகிறது. ஆனால் நிலைமையோ வேறு மாதிரி இருக்கிறது. பலரும் திமுகவிற்கு தாவி வருகிறார்கள். சிலர் திமுகவில் சேர தூதுவிட்டும் வருகிறார்கள்.
சட்டசபை தேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அமைதியாக இருந்த சசிகலா, மீண்டும் அரசியல் களத்தில் இறங்க போவதாக கூறி தொண்டர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறார். சசிகலாவிடம் பேசும் கட்சி நிர்வாகிகள் பாரபட்சம் இல்லாமல் நீக்கப்படுகின்றனர்.
ஆனாலும் சசிகலா தொடர்ந்து தொண்டர்களுடனும், அடிமட்ட நிர்வாகிகளிடமும் போனில் பேசுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிசாமி, டிடிவியின் அமமுக கூடாரத்தை காலி செய்து அதிமுகவில் சேர்க்கும்படி மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளாராம். ஆனால் இதை பற்றி எந்த கருத்தும் இதுவரை தெரிவிக்காமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அமைதியாக இருக்கிறார். இதேபோல் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அமைதியாக உள்ளார்.

ஓ பன்னீர்செல்வம் அமைதி
சட்டசபை தேர்தலில் தோற்றாலும் வலுவான எதிர்க்கட்சியாக அதிமுக திகழ்வதற்கு எடப்பாடி பழனிசாமி முக்கிய காரணம் என்று அதிமுக நிர்வாகிகள் நம்புகிறார்கள். குறிப்பாக கொங்கு பகுதியில் ஏராளமான எம்எல்ஏக்கள் அதிமுக பெற்றதற்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்கிறார்கள். இதனால் தான் பெரும்பாலான எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தான் வர வேண்டும் என்று உறுதியாக இருந்தனர். அதன்படியே எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக மாறினார். எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்காததால் வருத்தம் அடைந்த ஓ பன்னீர்செல்வம் ஒருகட்டத்தில் அமைதியாகிவிட்டார்.

தினமும் பேசும் சசிகலா
ஆனால் தனது தலைமையை முன்னிறுத்திவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பிரச்னையாக சசிகலா உருவெடுத்தார். தேர்தலில் ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா, இப்போது அதிமுகவை கைப்பற்ற தீவிரமாக திட்டமிட்டு வருகிறார். இதற்கு எதிராக சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக கருதப்படுபவர்களை வைத்து அறிக்கைவிட வைத்தார் எடப்பாடி பழனிசாமி ஆனால் கொஞ்சமும் சளைக்காத சசிகலா, அமமுக மற்றும் அதிமுக தலைவர்களை தொடர்பு கொண்டு தினமும் பேசுகிறார். அதை வெளியிட்டும் வருகிறார். அதிமுகவினர் மீது நடவடிக்கை பாய ஆரம்பித்ததால் இப்போது சசிகலாவின் போன் வந்தாலே அதிமுக முக்கிய தலைவர்கள் எஸ்கேப் ஆவதாக சொல்லப்படுகிறது.

அதிமுக நிர்வாகிகள்
இதனிடையே உஷாரான எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் அதிமுக மாவட்டச் செயலாளர்களை அழைத்து அமமுகவினரை தொடர்பு கொண்டு பேசி அதிமுகவுக்கு அழைத்து வாருங்கள் என்று உத்தரவிட்டாராம். இதனால் சென்னை, திருவள்ளூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் அதிமுகவில் ஐக்கியமாகிவிட்டார்கள். இதேபோல தமிழகம் முழுவதும் அமமுகவினரை இழுக்கும் வேலைகளை அதிமுக நிர்வாகிகள் செய்யத் தொடங்கிவிட்டார்களாம். ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவுக்கு ஆதரவாகவும் இருக்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. என்ன நடந்தாலும் எடப்பாடி பழனிசாமியுடன் ஒற்றுமையாக இருப்பது என்பதில் ஓ பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறாராம்,

எடப்பாடி திட்டம்
இப்போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். பிரச்சனையே சசிகலா என்பது போல் மாறி உள்ளது. சசிகாவின் வியூகத்தை உடைத்து எறியும் முயற்சியில் இறங்கி உள்ளார் எடப்பாடி. தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவினரை இழுத்து வாருங்கள் என்று மாவட்டச் செயலாளருக்கு எடப்பாடி அசைன்மெண்ட் கொடுத்துள்ளாராம்.

அமமுக நிர்வாகிகள்
ஆனால் நிலைமையே வேறாக உள்ளது. அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் திமுகவின் பக்கம் சாய்ந்துவிட்டார்கள். அதிமுகவில் சேர்ந்தால் எதிர்காலம் இல்லை என்று கருதி திமுகவில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்களாம். தர்மபுரியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நெல்லை மாவட்ட அமமுக செயலாளர் ஐயப்பன் ஆகியோர் திமுகவில் சேர்ந்து விட்டனர். மேலும் பலர் திமுகவில் சேர மாவட்டச் செயலாளர்களிடம் பேசி வருகின்றனர். ஒன்றிய அளவில் உள்ள நிர்வாகிகள் திமுகவில் சேர்ந்தும் வருகின்றனர். இதனால் அமமுக கூடாராம் திமுகவில் ஐக்கியமாகி வருகிறது












Click it and Unblock the Notifications